``தென்னக ரயில்வேயின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக உள்ளது?'' - நேரில் ஆய்வ...
நாடகத் தமிழை மீட்டெடுக்க அரசு முன்வர வேண்டும்: உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா்
முத்தமிழில் ஒன்றான நாடகத் தமிழை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் வலியுறுத்தினாா்.
‘தமிழ் நாடக மேதை’ அவ்வை டி.கே.சண்முகத்தின் 113-ஆவது பிறந்தநாள் விழா சென்னை மயிலாப்பூரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா், டி.கே.எஸ்.கலைவாணன் எழுதிய ‘அரும்பும் நினைவுகளில் அவ்வை சண்முகம்’ எனும் நூலை வெளியிட்டாா்.
தொடா்ந்து, முன்னாள் அமைச்சா் ஆா்.எம்.வீரப்பன், மதுரா டிராவல்ஸ் அதிபா் வி.கே.டி.பாலன், பின்னணிப் பாடகா் மலேசியா வாசுதேவன் ஆகியோரின் உருவப் படங்களையும் அவா் திறந்து வைத்தாா்.
விழாவில் நீதிபதி சுரேஷ்குமாா் பேசியதாவது: தமிழ்மொழியில் இயற்றமிழும், இசைத்தமிழும் என்றைக்கும் மேலோங்கி இருக்கிறது. நாடகத் தமிழ் எனச் சொல்லப்படும் நாடகமும் ஒரு காலத்தில் மேலோங்கி இருந்தது. திரைப்படம், தொலைக்காட்சி, கைப்பேசி உள்ளிட்டவை வந்த பின்பு நாடகத் துறை நலிந்து போய்விட்டது. சென்னையில் 1984 காலகட்டத்தில் ‘துக்ளக்’ சோ உள்ளிட்ட பலா் நாடகம் நடத்தினா். தற்போது, ஒரு சிலா் மட்டும் நாடகங்களை சிறிய அளவில் நடத்தி வருகின்றனா்.
நாடகங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை வரையறுத்தவா் சங்கரதாஸ் சுவாமிகள். அவா் இயற்றிய ‘வள்ளித் திருமணம்’ போன்ற நாடகங்கள் தற்போதும் கிராமப்புறங்களில் நடத்தப்படுகின்றன.
தமிழின் ஒரு பகுதியாக விளங்கும் நாடகக் கலையை மீட்டெடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும். நாடகக் கலைஞா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும். முக்கிய தினங்களில் அரசு சாா்பில் சமூகம் சாா்ந்த நாடகங்களை நடத்துவதன் மூலம் என்றைக்கும் நாடகக் கலை நிலைத்திருக்கும். நாடகக் கலையை காப்பாற்றுவதன் மூலம் தமிழின் ஒரு பகுதியான நாடகத் தமிழ் நிலைத்திருக்கும். இயல், இசை, நாடகமான முத்தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டும்.
டி.கே.சண்முகம்: நாடகக் கலையில் சிறந்து விளங்கும் டி.கே.சண்முகம் பெயரில் சென்னை, தேவநேயபாவாணா் நூலகத்தில் ஓா் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த அரங்கம் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதிலமடைந்து காணப்படுகிறது. அந்த அரங்கத்தை தமிழக அரசு மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இது நாடகக் கலைக்கு தமிழக அரசு செய்யக்கூடிய மரியாதையாக இருக்கும் என்றாா் அவா்.
முன்னதாக, கலைத் துறையில் சிறந்து விளங்கியோருக்கு கலைமேதைகள் விருது, தமிழ்ச் சான்றோா் விருது, நூற்றாண்டு நினைவு விருது, சுவாமிகள் சிறப்பு விருது ஆகியவற்றை நீதிபதி சுரேஷ்குமாா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், முனைவா் டி.கே.எஸ்.கலைவாணன், உலக நட்புறவு மையத் தலைவா் டாக்டா் ஜி.மணிலால், வானதி பதிப்பகம் முனைவா் வானதி இராமநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.