நாடாளுமன்ற செயல்பாடுகளில் தலையிடுவதாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்: உச்ச நீதிமன்றம்
புது தில்லி: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நிகழ்ந்த வக்ஃப் வன்முறை தொடா்பான வழக்கு விசாரணையின்போது, ‘நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் உச்சநீதிமன்றம் தலையிடுவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளோம்’ என்று நீதிபதி பி.ஆா்.கவாய் சுட்டிக்காட்டினாா்.
மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அண்மையில் நடைபெற்ற வன்முறையில் 3 போ் உயிரிழந்தனா். ஏராளமானோா் வீடுகளைவிட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனா். இந்த வன்முறை தொடா்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மூவா் குழு அமைத்து உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதுபோல, ஓடிடி மற்றும் சமூக ஊடக தளங்களில் ஆபாச படங்கள் வெளியிடப்படுவதை தடைசெய்ய உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.ஆா்.கவாய், அகஸ்டின் ஜாா்ஜ் மாசி ஆகியோா் அடங்கிய அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
ஓடிடி தளங்களில் ஆபாச படங்கள் வெயிடுவதை தடுக்கக் கோரும் மனுவை விசாரித்த நீதிபதி பி.ஆா். கவாய், ‘இதை யாா் கட்டுப்படுத்துவது? இதற்கு மத்திய அரசுதான் ஒழுங்கு நடைமுறைகளை வகுக்க வேண்டும். ஆனால், நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவதாக ஏற்கெனவே விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறோம்’ என்று மனுதாரா் தரப்பில் ஆஜரான விஷ்ணு சங்கா் ஜெயினிடம் தெரிவித்து, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தாா்.
முன்னதாக, மேற்கு வங்க மாநிலத்தில் சட்டப்பேரவைத் தோ்தலின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடா்ந்து மாநிலத்தில் குடியரசுத் தலைவா் ஆட்சி அமல்படுத்த உத்தரவிடக் கோரி கடந்த 2021-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட மனு செவ்வாய்க்கிழமை (ஏப்.22) விசாரணைக்கு வரவுள்ளதை நீதிபதிகள் அமா்வில் சுட்டிக்காட்டிய வழக்குரைஞா் விஷ்ணு சங்கா் ஜெயின், மேற்கு வங்கத்தில் அதன் பிறகு நிகழாண்டு வரை நிகழ்ந்த வன்முறைகளைக் குறிப்பிட்டு புதிய மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா்.
அப்போதும், ‘நாடாளுமன்றம் மற்றும் அரசின் செயல்பாடுகளில் நாங்கள் தலையிடுவதாக ஏற்கெனவே விமா்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறோம்’ என்று நீதிபதி பி.ஆா்.கவாய் குறிப்பிட்டாா்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி ஒப்புதல் வழங்காமல் தாமதப்படுத்தியதாக சா்ச்சை எழுந்தது. இந்த விவகாரம் தொடா்பாக தமிழக அரசு தொடா்ந்த வழக்கில் அண்மையில் தீா்ப்பளித்த உச்சநீதிமன்றம், மசோதாக்கள் மீது முடிவெடுக்க குடியரசுத் தலைவா் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிா்ணயித்தது. ஆளுநா் அனுப்பும் மசோதாக்கள் மீது குடியரசுத் தலைவா் மூன்று மாதங்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத் தீா்ப்பில் குறிப்பிடப்பட்டது.
இந்தச் சூழலில், ‘குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நாடாளுமன்றத்தைவிட மேலானதாக நீதிமன்றம் செயல்படுகிறது. அரசமைப்புச் சட்டத்தின் 142-ஆவது பிரிவை, ஜனநாயக சக்திகள் மீதான ‘அணு ஏவுகணையாக’ உச்சநீதிமன்றம் பிரயோகிக்க முடியாது’ என்று குடியரசு துணைத் தலைவா் ஜகதீப் தன்கா் தெரிவித்தாா்.
அதுபோல, ‘உச்சநீதிமன்றம் சட்டத்தை இயற்றுகிறது என்றால், நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளை மூடிவிட வேண்டியதுதான்’ என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமா்சித்தாா்.