அரசுப் பள்ளிகளில் மாலை சிற்றுண்டி, நாள்தோறும் முட்டை! புதுவை பட்ஜெட்டில் அறிவிப்...
நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் கைது!
இந்தியாவிலிருந்து அவர்களது தாயகத்திற்கு நாடு கடத்தப்பட்டு மீண்டும் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தினர் 3 பேர் புது தில்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மார்ச் 10 அன்று காவல் துறையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் புது தில்லியின் பிவிசி மார்க்கெட் முண்டகா, பாபா ஹரிதாஸ் காலனி, சுல்தான் புரி, பெனிவால் லோஹா மண்டி, இந்திரா ஜீல் மற்றும் ஹனுமான் கமாருதீன் நகர் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அப்போது, பீராகார்ஹி முகாமிலுள்ள காளி மாதா கோயிலின் முன்பு சந்தேகப்படும்படியான மூன்று பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதலில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறிய அவர்கள் மூவரும் பின்னர் வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறியதை ஒப்புக்கொண்டனர்.
இதையும் படிக்க:பாதுகாப்புப் படையினரின் வாகனம் பள்ளத்தில் கவிழ்ந்து 3 வீரர்கள் பலி! 13 பேர் படுகாயம்!
இதனைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் குரிகிராம் பகுதியைச் சேர்ந்த சஃப்ருதீன்(வயது 36), இப்ராஹிம் (38) மற்றும் சொராப் (46) ஆகிய மூவரும் ஏற்கனவே சட்டவிரோதமாக இந்தியாவினுள் நுழைந்ததற்காக தங்களது தாயகத்திற்கு நாடுகடத்தப்பட்ட நிலையில் அவர்கள் தற்போது மீண்டும் சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்திய அதிகாரிகள் அவர்களை மீண்டும் வங்கதேசத்திற்கு நாடு கடத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, புது தில்லியில் 833 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் 267 பேர் சந்தேகப்பட்டியலில் உள்ளதாகவும், அதில் 174 பேர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் 93 பேர் தாங்கள் அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனக் கூறியதாகவும் இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.