30 நாள்களில் போர்நிறுத்தம்: உக்ரைன் சம்மதம்!
ரஷியா உடனான போரை 30 நாள்களுக்கு நிறுத்த உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது.
சௌதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ், உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் அதிபர் அலுவலகத் தலைவர் ஆண்ட்ரி யெர்மக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ரஷிய - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா மேற்கொண்டு வரும் முயற்சியின் ஒரு பகுதியாக வாஷிங்டனில் இரு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி இடையேயான சந்திப்பு கடும் வாக்குவாதத்தில் நிறைவுபெற்றது. அதன் காரணமாக, ஸெலென்ஸ்கியுடனான பேச்சுவாா்த்தையை டிரம்ப் பாதியில் முடித்துக்கொண்டு புறப்பட்டார்.
இந்த நிலையில், இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மார்கோ ரூபியோ முன்னிலையில், அமெரிக்க மற்றும் உக்ரைன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அமெரிக்க வெளியுறவுச் செயலர் மார்கோ ரூபியோ கூறுகையில், “உக்ரைன் அனைத்துக்கும் தயாராக இருக்கிறது. துப்பாக்கிச் சண்டையை நிறுத்திவிட்டு ஆம்.. இல்லை என்று சொல்லும் நிலையில் தான் உக்ரைன் இருக்கிறது” என்றார்.
இதையும் படிக்க: இந்தியா வருகிறார் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ்!
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் மைக் வால்ட்ஸ் கூறும்போது, “அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அமைதிக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
ரஷியப் போருக்கு மத்தியில் அமெரிக்காவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அதேவேளையில் மாஸ்கோவுடனான போரில் 30 நாள்களுக்குள் போர்நிறுத்தம் செய்யவும் உக்ரைன் ஒப்புதல் அளித்துள்ளது.
தற்போதைய நிலையில் போர்நிறுத்தத்தை ஏற்றுக்கொள்ள ரஷிய அதிபர் புதின் தயாரா இருக்கிறாரா? என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இந்த வார இறுதியில் புதினுடன் பேச எதிர்பார்ப்பதாக டிரம்ப் கூறியிருந்தார். அவர்களின் உரையாடல் வெள்ளிக்கிழமை நடைபெறக்கூடும் என்று ரஷிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இதனால், டிரம்ப் -புதின் இடையேயான பேச்சுவார்த்தைக்குப் பின் சில முக்கிய முடிவுகள் எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ரயில் சிறைப்பிடிப்பு விவகாரம்: 16 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை! 104 பயணிகள் மீட்பு!