மாணவர்கள் மற்றும் ஆசிரியர் வேடமிட்டு லண்டன் செல்ல முயன்ற 8 பேர் கைது!
மகாராஷ்டிரத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு சட்டவிரோதமாக லண்டன் செல்ல முயன்ற 8 பேர் மும்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையிலுள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், ஹரியாணாவைச் சேர்ந்த தனியார் கல்வி நிறுவனத்தின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர் என 8 பேர் நேற்று (மார்ச் 10) அதிகாலை லண்டன் செல்ல காத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவர் பரிமாற்ற திட்டத்தின் கீழ் லண்டனிலுளள் பல்கலைக்கழகத்திற்கு செல்வதாகக் கூறிய அவர்களிடம் அங்கு அவர்கள் பங்குபெறவுள்ள பல்கலைக்கழகம் குறித்த விமான நிலைய அதிகாரிகளின் கேள்விகளுக்கு அவர்களால் சரியான தகவல்கள் அளிக்க முடியவில்லை எனக் கூறப்படுகின்றது.
இதனால், சந்தேகமடைந்த அதிகாரிகள் அவர்களை விசாரணைக்காக தனியாக அழைத்து சென்றனர்.
இதையும் படிக்க: சொமாட்டோ பெயரை மாற்ற பங்குதாரர்கள் ஒப்புதல்!
இதனைத் தொடர்ந்து, அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் போலியான ஆவணங்கள் மூலம் அவர்கள் சட்டவிரோதமாக பிரிட்டன் நாட்டிற்கு பயணம் மேற்கொள்ள முயன்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் அந்நாட்டிற்கு செல்வதற்காக பிட்டூ எனும் தரகரிடம் ஆளுக்கு தலா ரூ.20 லட்சம் வழங்கியதாகவும் அந்த தரகர்தான் அவர்களை மாணவர்கள் மற்றும் ஆசிரியர் போல் வேடமிட்டு பயணிக்க செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
மேலும், அந்த தரகர் அவர்களுக்கு போலியான விசா மற்றும் போலியான தூதரக ஆவணங்கள் ஆகியவை வழங்கி ஏமாற்றியுள்ளது அம்பலமாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் மீது ஆள் கடத்தல் உள்ளிட்ட குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்கள் 8 பேரும் சாகர் காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
முன்னதாக, போலியான கடவுச்சீட்டு மற்றும் விசாக்களின் மூலம் சுமார் 80 பேரை கனடா, துருக்கி, நெதர்லாந்து மற்றும் போலாந்து ஆகிய நாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பிய தரகரை மும்பை போலீஸார் கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.