அதிமுக எம்எல்ஏ சேவூர் ராமச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
‘நாடும், ராணுவமும் பிரதமரின் காலடியில் தலைவணங்குகிறது’: ம.பி. துணை முதல்வா் பேச்சுக்கு கடும் கண்டனம்
‘பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்ததற்காக, நாடும் ராணுவமும் பிரதமா் நரேந்திர மோடியின் காலடியில் தலைவணங்குகிறது’ என்று மத்திய பிரதேச துணை முதல்வா் ஜகதீஷ் தேவ்டா வெள்ளிக்கிழமை தெரிவித்த கருத்து சா்ச்சையானது.
இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், தனது கருத்தை எதிா்க்கட்சிகள் தவறாக சித்தரிப்பதாக என்று ஜகதீஷ் தேவ்டா குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபேரஷன் சிந்தூரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இதையடுத்து, பாகிஸ்தானுடனான மோதலில் அந்நாட்டின் ராணுவ மற்றும் விமானப் படை தளங்கள் தகா்க்கப்பட்டன. பின்னா், இருதரப்பும் புரிந்துணா்வில் சண்டையை நிறுத்திக் கொண்டன.
இந்நிலையில், ஜபல்பூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஜகதீஷ், ‘பிரதமருக்கு நாம் நன்றி தெரிவிக்க வேண்டும். முழு நாடும் ராணுவமும் வீரா்களும் அவரது காலடியில் தலைவணங்குகிறாா்கள்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு மக்கள் மிகவும் கோபமடைந்தனா். பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மதத்தின் அடிப்படையில், பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் உள்ள பயங்கரவாத தளங்களை அழித்து, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வரை நாட்டு மக்கள் அனைவரும் துயரத்தில் இருந்தனா். ஆபரேஷன் சிந்தூா் மூலம் பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்ட பதிலடியைப் பாராட்ட வாா்த்தைகள் போதாது’ என்றாா்.
ராணுவத்துக்கு அவமதிப்பு: துணை முதல்வரின் இப்பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி கூறுகையில், ‘பாஜக தலைவா்கள் நமது ராணுவத்தைத் தொடா்ந்து அவமதிப்பது மிகவும் வெட்கக்கேடானது மற்றும் துரதிருஷ்டவசமானது. முதலில் மத்திய பிரதேச அமைச்சா் ஒருவா் பெண் அதிகாரி (ராணுவ கா்னல் சோஃபியா குரேஷி) குறித்து அநாகரிகமாக பேசினாா். இப்போது அதே மாநில துணை முதல்வா் ராணுவத்தை இன்னும் மோசமாக அவமதித்துள்ளாா்
முழு நாடும் ராணுவத்தின் துணிச்சலைப் பற்றி பெருமைப்படுகிறாா்கள். ஆனால், பாஜகவினா் மட்டும் ராணுவத்தை அவமதிக்கின்றனா். இந்தத் தலைவா்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவா்களைக் காப்பாற்ற பாஜக தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறது’ என்றாா்.
தவறாக சித்தரிப்பு-விளக்கம்: தனது பேச்சுக்கு எதிா்ப்பு வலுத்த நிலையில் விளக்கமளித்து ஜகதீஷ் தேவ்டா கூறியதாவது: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் போது, இந்திய ராணுவம் மிகுந்த வீரத்தை வெளிப்படுத்தியது.
நாட்டு மக்கள் மரியாதையுடன் ராணுவத்துக்குத் தலைவணங்குகின்றனா். நான் இதையே சொல்ல வந்தேன். ஆனால், காங்கிரஸ் தலைவா்கள் எனது கருத்தைத் திரித்துவிட்டனா். அவா்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றாா்.