நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்: தமிமுன் அன்சாரி
மத்திய அரசின் 2025-26 ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை நாட்டின் நலனை கருத்தில் கொள்ளாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மனித நேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
இது பற்றி மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் மு. தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:
ஒவ்வொரு மாநிலத்தின் வரி வருவாய்க்கு ஏற்ப நீதியான முறையில் வரி பங்கீடு நடத்தப்படவில்லை என்பதை இந்த நிதி நிலை அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.
இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு அப்பட்டமாக ஓரங்கட்டிருப்பதை எளிதில் உணர முடிகிறது. தமிழ்நாட்டில் ஓடும் ரயில்கள்தான் இந்தியாவிலேயே அதிக லாபத்தை ஈட்டுகின்றன.
இந்நிலையில் தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்காதது கண்டிக்கத்தக்கது. இந்த நிதிநிலை அறிக்கையில் பிகார் மக்கள் மீது காட்டக்கூடிய கருணையை குறை கூறவில்லை.
ஆனால் தமிழ்நாட்டு மக்களின் மீது ஏன் இந்த பாராபட்சம் என்ற கேள்வி எழுகிறது. பிகாருக்கு ஆப்பிளை தட்டில் வைத்து கொடுத்ததை குறை கூறவில்லை.
ஆனால் தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்சம் ஒரு நெல்லிக்கனி அளவாவது திட்டங்களைத் தந்திருக்கலாம்.
மத்திய அரசுக்கு ஆதரவாக வாதாடுபவர்கள் இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இதையும் படிக்க: கோவை மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடக்கம்!
இந்தியாவில் 35 கோடி மக்களுக்கு அடிப்படை மருத்துவ - சுகாதார வசதிகள் கிடைக்காத நிலையில், அதற்கு ரூ. 98 ஆயிரத்து 311 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.
நாட்டின் முதல்நிலை உற்பத்தி களமாக இருக்கும் விவசாயத் துறைக்கு 1 லட்சத்து 71 ஆயிரத்து 457 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்திருப்பது சரியான அணுகுமுறை இல்லை.
காப்பீட்டு துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 100 விழுக்காடு என உயர்த்தி இருப்பது எல்ஐசி போன்ற நிறுவனங்களின் தனித்தன்மைக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வரும் நிலையில்; பொருளாதார மந்த நிலை ஏற்பட்டு சாமானிய மக்களிடம் பணப்புழக்கமும் குறைந்து வரும் நிலையில்; இந்த பட்ஜெட் ஒரு சார்பானதாகவும், திருப்தியற்ற வகையிலும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளார்.