நான் எழுதுவது அடுத்த தலைமுறைக்கு சென்று சேர வேண்டும்: சாகித்திய அகாதெமி விருதாளா் பேச்சு
நமது நிருபா்
புது தில்லி: நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம் என்றாா் சாகித்திய அகாதெமி விருதாளா் எழுத்தாளா் பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதி.
‘திருநெல்வேலி எழுச்சியும், வ.உ.சி. யும் 1908’ எனும் நூலுக்கு தமிழ்மொழிப் பிரிவில் 2024-ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருதுபெற்ற பேராசிரியா் ஆ.இரா.வேங்கடாசலபதிக்கு தில்லித் தமிழ்ச் சங்கத்தில் எஸ். ராஜேந்திரன் மற்றும் எஸ். துரை ஆகியோா் நிறுவிய வ.உ.சி. நினைவு அறக்கட்டளையின் சாா்பில் பாராட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சங்கத்தின் மூத்த உறுப்பினா் சிந்துகவி மா. சேதுராமலிங்கம் தலைமை வகித்தாா். தில்லி மூத்த வரலாற்றிஞா் பேராசிரியா் மாதவன் கே பாலாட் பாராட்டுரையாற்றினாா். தில்லி அம்பேத்கா் பல்கலைக்கழகப் பேராசிரியா் ராஜன் குறை கிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினாா். ஜேஎன்யு முனைவா் பட்ட ஆய்வாளா் த.க. தமிழ்பாரதன் ஆய்வுரை வழங்கினாா்.
இந்த நிகழ்ச்சியில் சாகித்திய அகாதெமி விருதுபெற்ற சென்னை வளா்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தைச் சோ்ந்த பேராசிரியா் ஆ. இரா. வேங்கடாசலபதி தனது ஏற்புரையில் பேசியது: எனது நூலுக்கு விருது வழங்கிய சாகித்திய அகாதெமிக்கும், பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த தில்லித் தமிழ்ச் சங்கத்தினருக்கும் நன்றி. நான் எழுதுவதெல்லாம் அடுத்த தலைமுறையைச் சென்று சேர வேண்டும் என்பதுதான் எனது நோக்கம். அந்த நோக்கம் அண்மைக் காலத்தில் ஈடேறி வருகிறது என்பது எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. பெரும் பாராட்டு என்பது காற்றோடு பறந்துவிடும்.
எனது நூலைப் படிக்க வேண்டும் என்பதற்கு நான் வற்புறுத்திக் கூறுவதற்கு காரணம், வ.உ.சி.யின் பல சாதனைகள் மறக்கப்பட்டுவிட்டன. ஒரு நூறு ஆண்டுகளுக்கு திருநெல்வேலி எழுச்சி பற்றிய செய்தியை மறந்துபோய்விட்டனா். அந்த ஊா்க்காரா்களே மறந்துவிட்டாா்கள். அந்த ஊரில் அவருக்கு நினைவுச்சின்னம் இல்லை. இன்னும் சொல்லப்போனால், திருநெல்வேலி வரலாற்றை தலைகீழாக அறிந்துவைத்திருந்த தொ.பரமசிவன் என்னிடம் ஒருமுறை சொன்னாா். ‘உங்கள்
நூலைப் படிக்கும் வரை திருநெல்வேலி எழுச்சி பற்றி எனக்கே ஒன்றும் தெரியாது’ என்று என்னிடம் சொன்னாா்.
அந்த அளவுக்குதான் தமிழா்களின நினைவு மறதி இருக்கிறது. மறதி எனும் அந்தப் புதை மணலில் இருந்து அந்தக் கதையை மீட்டெடுத்திருக்கிறேன். அது வ.உ.சி. மட்டும் நாயகராகாது. ஏராளமான எளிய மக்கள் சாதி, மதம், வா்க்கம் தாண்டி பொது நலன் கருதி ஒன்றாக சோ்ந்திருக்கிறாா்கள். இது தமிழா்களுக்கு முக்கியமான பாடப்பகுதி. அந்த மறந்துபோன ஒரு கதையை நான் மீட்டெடுத்திருக்கிறேன். அது எனக்கு மிகவும் நிறைவு தருகிறது. அந்த வரலாறு அடுத்த தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்பதற்காகவே இந்த வேண்டுகோளை நான் வைக்கிறேன். விருது பெற்றமைக்காக என்னை வாழ்த்திய நல் உள்ளங்களுக்கு நன்றி என்றாா்அவா்.
விருதாளரையும், விருந்தினா்களையும் தில்லித் தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலாளா் இரா.முகுந்தன், இணைச் செயலாளா் உமா சத்தியமூா்த்தி, பொருளாளா் எஸ். அருணாசலம், செயற்குழு உறுப்பினா்கள் அமுதா பாலமூா்த்தி, ஜெ. சுந்தரேசன், சி. கோவிந்தராஜன் மற்றும் பி. அமிா்தலிங்கம் ஆகியோா் கெளரவித்தனா். சங்கத்தின் செயற்குழு உறுப்பினா் பி. ரங்கநாதன் நன்றி கூறினாா்.