செய்திகள் :

நிலத்தில் கால் வைக்காத கடல் நாடோடிகள்; கடலில் பிறந்து, இறக்கும் பழங்குடியின மக்கள் பற்றி தெரியுமா?

post image

உலகில் இன்றும் பல பழங்குடியின மக்கள் மலைப்பகுதியிலும், கடல் பகுதியிலும் தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

நவீன நாகரிகத்தில் இருந்து விலகி பழங்குடியினர் தங்களை தனிமைப்படுத்தி வாழ்ந்து வருகின்றனர். இதுபோன்ற நாடோடி இன மக்கள் பலர் இருந்தும் தற்போது இந்த பதிவில் பஜாவ் பழங்குடியினர் குறித்து விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.

இந்த பஜாவ் பழங்குடியினர் இந்தோனேசியா, மலேசியா, பிலிப்பைன்ஸ் கடலோரப் பகுதிகளில் வசிக்கின்றனர். குறிப்பாக தங்கள் வாழ்க்கையின் பெரும் பகுதியை கடலிலேயே கழிக்கின்றனர்.

அரிதாகவே நிலத்திற்கு வருகின்றனர். அதற்காகவே இந்த பழங்குடியினர் தனித்துவமாக தெரிகின்றனர்.

பஜாவ் இன மக்கள் தங்களது அசாதாரணமான டைவிங் திறனுக்கு பெயர் பெற்றவர்களாக உள்ளனர். எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் அவர்கள் ஐந்து முதல் 13 நிமிடங்கள் வரை மூச்சு பிடித்து கடல் ஆழத்தில் டைவிங் செய்வதாக கூறப்படுகிறது.

மருத்துவ ஆராய்ச்சி படி பஜாவ் இன மக்கள் சாதாரண மக்களை விட 50 சதவீத பெரிய மண்ணீரலை கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஆழமாகவும் நீண்ட நேரம் டைவிங் செய்யவும் முடியுமாம். இதற்கு PDE10A மரபணுவில் உள்ள மாறுபாடு தான் காரணம் என்று கண்டறிந்துள்ளனர்.

அவர்களுக்கு கடல் ஒரு வாழ்வாதாரத்திற்கான ஆதாரமாக மட்டுமல்லாமல் அவர்களின் அடையாளமாகவும் உள்ளது. அவர்கள் பாரம்பரிய மரக் கண்ணாடிகள் மற்றும் கைவினை ஈட்டிகளைப் பயன்படுத்தி மீன், ஆக்டோபஸ் மற்றும் கடல் வெள்ளரிகளை வேட்டையாடுகிறார்கள்.

லெபா-லெபா எனப்படும் மரப் படகுகளில் பஜாவ் மக்கள் வசிக்கிறார்கள். அவற்றை வீடுகளாகவும் பயண வழிமுறைகளுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

பருவகால மாற்றங்களைத் தொடர்ந்து, அவர்கள் தீவுகளுக்கு இடையில் நகர தொடங்கியுள்ளனர். உணவு, வருமானம் மற்றும் அன்றாடத் தேவைகளுக்கு என எல்லாவற்றிருக்கும் கடலையே முழுமையாக நம்பியுள்ளனர்.

மீன் பிடித்தல் அவர்கள் வாழ்வாதாரம் மட்டுமல்லாமல் பாரம்பரிய நடைமுறையாகவும் உள்ளது. சில சமூகத்தில் கடலோரத்தில் உள்ள தூண் வீடுகளில் குடியேற தொடங்கியுள்ள நிலையில், பஜாவ் பழங்குடியினர் கடலையே சார்ந்து உள்ளனர்.

இதற்கிடையில் சுற்றுலா வளர்ச்சி அடைந்ததை அடுத்து பாரம்பரிய மீன்பிடித்தலுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல சவால்கள் இருந்தபோதிலும் தங்களது கலாசாரத்தை பாதுகாக்க பஜாவ் பழங்குடியினர் பாடுபட்டு வருகின்றனர்.

கடலிலேயே அவர்களின் வாழ்க்கை சார்ந்து இருப்பதால், இவர்கள் நாடற்றவர்களாகவும், கல்வி, சுகாதாரம், முறையான வேலை வாய்ப்பு இல்லாதவர்களாகவும் உள்ளனர். இவர்கள் நிலத்தில் அடியெடுத்து வைப்பதே அரிதாக உள்ளது.

சிறுவயதிலிருந்தே டைவிங், பாரம்பரிய மீன் பிடித்தல், பவளப்பாறைகளுக்கு அருகில் அவர்களின் வாழ்க்கை என இயற்கையோடு இயற்கையாக பஜாவ் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர்.