நீட் தேர்வு அச்சம்: அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி தற்கொலை!
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நீட் தேர்வைப் பற்றிய அச்சத்தால் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள தாதாபுரம் பகுதியைச் சேர்ந்த இந்துமதி(19) என்ற மாணவி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அரசுப்பள்ளியில் படித்து பன்னிரண்டாம் வகுப்பில் 600-க்கு 520 மதிப்பெண்களைப் பெற்ற மாணவி இந்துமதி, கடந்த ஆண்டு நீட் தேர்வில் 350 மதிப்பெண் எடுத்தும், அவருக்கு மருத்துவம் பயில கல்லூரியிகளில் இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இந்த ஆண்டு நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்து விட வேண்டும் என தீவிரமாக படித்து வந்துள்ளார் இந்துமதி.
இதனிடையே, நீட் தேர்வில் ஒருவேளை இம்முறையும் மதிப்பெண் அதிகம் பெற்றும் மருத்துவம் பயில இடம் கிடைக்கவில்லையெனில் என்ன செய்வது? என்ற குழப்பம் மாணவியிடம் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருந்து வந்த இந்துமதி, இந்த அச்சத்தால் வீட்டில் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
தற்கொலை எண்ணத்தால் 15 வயது முதல் 29 வயதில் உள்ளவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுப்பது அவசியம். இதற்காக 104 ஆலோசனை மையம் - தற்கொலை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].