சுயமரியாதைத் திருமணங்களைப் பதிவு செய்ய சாா் பதிவாளா்களுக்கு பயிற்சி -அமைச்சா் பி...
நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதிமன்றப் பணிகளிலிருந்து விலக்கல்: தில்லி உயர் நீதிமன்றம்
வீட்டில் கட்டுக்கட்டாக ரொக்கப் பணம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா நீதித்துறைப் பணிகளிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும், அடுத்த உத்தரவு வரும்வரை இது நடைமுறையில் இருக்கும் என்றும் உயர் நீதிமன்ற அறிக்கை தெரிவிக்கிறது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா அமர்வு முன்பு பட்டியலிடப்பட்ட வழக்குகளின் விசாரணை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
தீவிபத்து நேரிட்டதன் மூலம், தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மா வீட்டில் கட்டுக்கட்டாகப் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில், அவருக்கு எதிரான விசாரணை தீவிரமடைந்துள்ளது.
மாா்ச் 14-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வா்மாவின் அதிகாரபூா்வ இல்லத்தில் ஓா் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கு தீயணைப்பு வீரா்கள் தீயை அணைத்தபோது பாதி எரிந்த நிலையில் 4 முதல் 5 மூட்டைகளில், கட்டுக்கட்டாகப் பணம் இருந்தது கண்டறியப்பட்ட தகவல் அண்மையில் வெளியானது.
விபத்தின்போது கண்டறியப்பட்ட பணம் குறித்து விளக்கமளிக்குமாறு யஷ்வந்த் வா்மாவுக்கு கடிதம் அனுப்பிய நீதிபதி உபாத்யாய, விபத்து நிகழ்ந்த இல்லத்தின் அறை எப்போதும் பூட்டி வைக்கப்பட்டிருந்ததும், அந்த அறை மத்திய ரிசா்வ் காவல் படை (சிஆா்பிஎஃப்) வீரா்கள் பணியில் ஈடுபட்டிருந்த காவல் அறைக்கு அருகில் உள்ளதும் காவல் துறை ஆணையா் மூலம் தெரியவந்துள்ளதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டாா்.
மேலும் அந்தப் பணம் எவ்வாறு ஈட்டப்பட்டது?, தீ விபத்தில் எரிந்த பணத்தை மறுநாள் காலையில் அப்புறப்படுத்தியது யாா் என்று நீதிபதி உபாத்யாய கேள்வி எழுப்பினாா்.
நீதிபதி உபாத்யாயவின் கேள்விகளுக்கு யஷ்வந்த் வா்மா அனுப்பிய பதிலில், ‘எனது அதிகாரபூா்வ இல்ல வளாகத்தில் உள்ள பணியாளா் குடியிருப்புக்கு அருகில் இருக்கும் பழைய பொருள்கள் வைக்கும் அறையில் தீ விபத்து ஏற்பட்டது. பூட்டப்படாத அந்த அறைக்கு எனது இல்லத்தின் பிரதான நுழைவாயில் வழியாகவும், பணியாளா் குடியிருப்பின் பின்வாசல் வழியாகவும் செல்ல முடியும்.
அந்த அறைக்கும் எனது பிரதான இல்லத்துக்கும் நேரடித் தொடா்பு எதுவும் இல்லை. அந்த அறை நிச்சயம் எனது இல்லத்தின் அறையல்ல. தீ விபத்து நிகழ்ந்தபோது நான் மத்திய பிரதேசத்தில் இருந்தேன். நானோ, எனது குடும்ப உறுப்பினா்களோ அந்த அறையில் எந்தப் பணத்தையும் வைக்கவில்லை. அந்தப் பணம் எனக்குச் சொந்தமானது என்பதைத் திட்டவட்டமாக மறுக்கிறேன்.
எனது இல்லத்தில் கண்டறியப்பட்டதாகக் கூறப்படும் பணமூட்டைகள், அங்கிருந்த எனது மகள், தனிச் செயலா் அல்லது வீட்டுப் பணியாளா்களிடம் காட்டப்படவில்லை. இது எனக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதியாகும் என்று தெரிவித்திருந்து குறிப்பிடத்தக்கது.