போர் விமானங்களைப் பயன்படுத்திய பாகிஸ்தான்: கர்னல் சோஃபியா குரேஷி
புது தில்லி: போர் விமானங்களையும் தாக்குதலுக்குப் பயன்படுத்தியது பாகிஸ்தான். ஆனால், பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் அளவோடு பதிலடி கொடுத்து வருகிறது என்று இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் தாக்குதல் தொடர்பாக வெளியுறவுத் துறைச் செயலர் விக்ரம் மிஸ்ரி, இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் ஆகியோர் செய்தியாளர்களிடம் விவரித்தனர்.
அப்போது பேசிய இந்திய ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி, இந்தியாவை தேவையில்லாமல் சீண்டுகிறது பாகிஸ்தான். பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா தக்க முறையில் முறியடித்துள்ளது. எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய விமானப்படை தளங்களை தாக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. அதிவேக ஏவுகணைகளால் பஞ்சாப் விமானப்படை தளங்களை பாகிஸ்தான் தாக்க முயற்சித்துள்ளது. இந்தியா தரப்பில் பாலஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பதில் தாக்குதல் கொடுக்கப்பட்டுளள்து என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் ஆயுதங்களை இந்தியா தாக்கிய காணொலியை வெளியிட்டார் குரேஷி.
விமானப் படை விங் கமாண்டர் வியோமிகா சிங் கூறுகையில், இந்தியாவின் எஸ் 400 வான் பாதுகாப்பு அமைப்பு தாக்கப்பட்டதாக வதந்தி பரவி வருகிறது. தவறான தகவலை யாரும் நம்ப வேண்டாம். பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் எல்லைப் பகுதிகளான பாரமுல்லா, பூஞ்ச், ரஜௌரி, அக்னூர் பகுதிகளில் பாகிஸ்தான் பீரங்கி மூலம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தான் தாக்குதல்களை இந்தியா முறியடித்துள்ளது. டிரோன்கள் மற்றும் வெடிபொருள்களைக் கொண்டும் தாக்குதலை மேற்கொண்டது பாகிஸ்தான். இரு தரப்பிலும் கடுமையான மோதல் ஏற்பட்டு தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் ஆயுதக் கிடங்குகள், தாக்கப்பட்டுள்ளன. விமானப் படைத் தளத்தின் அருகே உள்ள மருத்துவமனைகளை பாகிஸ்தான் தாக்கியது.
மக்கள் வசிக்கும் பகுதியை ட்ரோன்கள் மற்றும் ஆயுதங்கள் மூலம் பாகிஸ்தான் தாக்கியது. அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன என்று விளக்கம் கொடுத்தார் வியோமிகா சிங்.
விமானப் படைத் தளங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று, இன்று எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வியோமிகா சிங் காட்டினார்.