CJI BR Gavai: "நீ நீதிபதியானால் அம்பேத்கர் காட்டிய வழியைப் பின்பற்றுவாய்" - தந்த...
நீர்வரத்து அதிகரிப்பு: மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
சேலம்: கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர்வரத்து எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
இந்த நீர்வரத்து தொடர்ந்தால், அடுத்த ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்துவரும் தென்மேற்குப் பருவமழை காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்குநீர் வரத்து அதிகரித்து நிரம்பிய நிலையில் உள்ளன. அணைகளில் பாதுகாப்புக் கருதிஉபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று மாலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 60,740 கன அடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து இன்று காலை வினாடிக்கு 73,452 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் நேற்று முன்தினம் காலை 112.73அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 116.84 அடியாக உயர்ந்துள்ளது.
கடந்த இரண்டு நாள்களில் அணையின் நீர்மட்டம் 4.16 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 22,500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 88.59 டி.எம்.சி.யாக உள்ளது.
நீர்வரத்தும் திறப்பும் இதே நிலையில் இருந்தால் ஒரு வார காலத்தில் மேட்டூர் அணை வரலாற்றில் 45வது ஆண்டாக அணை நிரம்பும் வாய்ப்பு உள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.