நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கு வாய்ப்பு
நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் சனிக்கிழமை (ஜூலை 26) முதல் ஜூலை 31 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஆரஞ்சு எச்சரிக்கை: நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சனிக்கிழமை (ஜூலை 26) பலத்த மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. இதனால், நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல, சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை (ஜூலை 26) லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை வரை அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் 100 மி.மீ. மழை பதிவானது. கோவை மாவட்டம், சின்னக்கல்லாறு - 100, வால்பாறை பிடிஓ -80, சின்கோனா, மேல்பவானி(நீலகிரி), நாலுமுக்கு (திருநெல்வேலி), உபாசி (கோவை), ஊத்து (திருநெல்வேலி) - 70 மி.மீ. மழை பதிவானது.
கரையை கடந்த புயல் சின்னம்: வடக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி(புயல்சின்னம்) வெள்ளிக்கிழமை அதிகாலை 5.30-க்கு மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேற்கு வங்கம் மற்றும் வங்கதேச கடற்கரைக்கு இடையே கரையைக் கடந்து வங்கதேச கடலோரப் பகுதிகளில் நிலவுகிறது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள் மன்னாா் வளைகுடா, குமரிக்கடல், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் வங்கக் கடலில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 26, 27 ) மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்றுவீசக்கூடும். இதனால், மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.