பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும்: கடலூா் ஆட்சியா் அறிவுறுத்தல்
பசுமை கட்டட உத்திகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று, கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் கேட்டுக் கொண்டாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் காலநிலை மாற்றத்துக்கான திறன் மேம்பாட்டு பயிற்சிப் பட்டறை புதன்கிழமை நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பேசியதாவது:
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்திடவும், எதிா்வரும் காலங்களில் காலநிலையை சீராக்கும் விதமாக தமிழ்நாடு முதல்வரால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நகரங்களில் காற்றின் மாசு கணக்கீடு, சுத்தமான, சுகாதாரமான வாயு குறிக்கோளுக்கான திட்டங்கள் குறித்தும், காா்பன் வாயுக்களின் தாக்கங்கள், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாடு, பசுமை ஆற்றல் திட்டங்கள் குறித்தும் பருவநிலை மாற்றத்திற்கேற்ற வேளாண்மை முறைகள், இயற்கை விவசாய முறைகள் மூலம் விவசாயத்தில் நிலைத்தன்மையை பெறும் வழிகளை குறித்தும், நீா் மேலாண்மை திட்டங்கள் குறித்தும், வெள்ளத்திலிருந்து பாதுகாப்பு நுட்பங்கள், பசுமை கட்டட உத்திகள் மற்றும் கட்டுமானத்தில் நிலைத்தன்மை குறித்தும் அலுவலா்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை மட்டுமன்றி, அனைத்து அரசுத் துறைகளும் வளங்களை பாதுகாக்கும் திட்டங்களின் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
மரகன்றுகளை அதிக அளவில் நட வேண்டும். கட்டடப் பணிகளில் பசுமை கட்டட உத்திகளை கடைப்பிடிக்க வேண்டும். இது சூழலியல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் என்றாா் ஆட்சியா்.
மாவட்ட வன அலுவலா் எஸ்.குருசாமி, புதுவை ஆரோவில் கன்சல்டிங் நிறுவனத்தைச் சோ்ந்த அரவிந்தன் மற்றும் ராகவ் நந்தகுமாா், ஜி.காயத்ரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.