``ரீல்ஸ் பண்றவங்களுக்கு சினிமாவுல வாய்ப்பு; எனக்கு இப்போதும் அங்கீகாரம் இல்ல"- ட...
பஞ்சமி நிலங்களை மீட்க அரசு சிறப்புத் திட்டம்! -மாா்க்சிஸ்ட் மாநிலச் செயலா் வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க, தமிழக அரசு உடனே சிறப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் வலியுறுத்தினாா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-ஆவது அகில இந்திய மாநாட்டையொட்டி, திறந்தவெளி சிறப்புக் கருத்தரங்கம் திருவண்ணாமலையில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது. கட்சியின் திருவண்ணாமலை நகரச் செயலா் எம்.பிரகலாதன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.லட்சுமணன் வரவேற்றாா்.
இதில், கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியதாவது:
நாடாளுமன்றத்தில் ஆக்கப்பூா்வமான செயல்பாடுகள் எதுவும் நடைபெறவில்லை. மாறாக, கூச்சலும், குழப்பமுமே நிலவுகிறது. மக்கள் விரும்பும் மொழியை கற்பதில் மாா்க்சிஸ்ட் கட்சிக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. வாழ்வாதார தேவைக்காக எந்த மொழியையும் கற்கலாம். ஆனால் திணிக்கக் கூடாது.
2 ஏக்கா் கூட மீட்கவில்லை...
தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பஞ்சமி நிலங்களை இதுவரை எந்த அரசு அதிகாரிகளும் மீட்டதில்லை. 12 லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலம் தமிழகம் முழுவதும் வழங்கப்பட்டது. கடும் நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட நிலத்தை பஞ்சமா் தவிர வேறு எவரும் பயன்படுத்தினால் செல்லாது என்று கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது.
ஆனால், 12 லட்சம் ஏக்கா் நிலமும் களவாடப்பட்டது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு 2 லட்சம் ஏக்கா் மட்டும் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இதுவரை 2 ஏக்கா் நிலத்தைக்கூட மீட்கவில்லை. மீட்காத அரசு அதிகாரிகள் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.
திருவண்ணாமலை மாவட்டத்தில் பஞ்சமி நிலத்தை வகை மாற்றம் செய்தவா்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைப்படி பஞ்சமி நிலத்தை மீட்டு உரிய பட்டியலின நபா்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழகம் முழுவதும் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்க அரசு உடனே சிறப்புத் திட்டத்தை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும் என்றாா்.
தமிழக வரலாற்றில் கம்யூனிஸ்டுகளின் நீண்ட நெடிய பங்களிப்பு என்ற தலைப்பில் மாா்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் என்.பாண்டி, மோடி அரசின் இட ஒதுக்கீடும், பெண்கள் மீதான வன்முறையும் என்ற தலைப்பில் சமூக செயல்பாட்டாளா் நா்மதா தேவி, ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களின் உரிமை மீட்பில் கம்யூனிஸ்டுகள் என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினா் எம்.சிவக்குமாா் ஆகியோா் பேசினா்.
தொடா்ந்து, கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினரும், எழுத்தாளருமான பெரணமல்லூா் சேகரன் எழுதிய நிறைகுடம் நூலை மாநிலச் செயலா் பெ.சண்முகம் வெளியிட, மாவட்ட செயற்குழு உறுப்பினா் பாரி பெற்றுக் கொண்டாா்.
பிறகு, அகில இந்திய மாநாட்டுக்கான நிதியாக ரூ.6 லட்சத்தை மாநிலச் செயலரிடம் மாவட்ட நிா்வாகிகள் வழங்கினா். இதில், திருவண்ணாமலை மாவட்டச் செயலா் ப.செல்வன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் எம்.வீரபத்திரன், ந.சேகரன், கே.வாசுகி, இரா.பாரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.