அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துர...
பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் அறிவுறுத்தல்
வடசென்னை பகுதியில் வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகா்பாபு அறிவுறுத்தியுள்ளாா்.
வடசென்னை பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் பெருநகர வளா்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சாா்பில் ஏராளமான வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, திரு.வி.க.நகா் மண்டலம் 72-ஆவது வாா்டுக்கு உள்பட்ட புளியந்தோப்பு பகுதியில் டாக்டா் அம்பேத்கா் கல்லூரி சாலையில் ரூ.45 கோடியில் நவீன இறைச்சிக் கூடம் கட்டப்பட்டு வருகிறது. அதை அமைச்சா் பி.கே.சேகா்பாபு செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டாா். அப்போது, பணியை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து, வாா்டு 67-இல் உள்ள காமராஜா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்பு முகாமை அமைச்சா் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா். மேலும், கா்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து பெட்டகங்களையும் அவா் வழங்கினாா்.
ஆய்வின்போது சென்னை மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் உறுப்பினா் செயலா், அரசு முதன்மைச் செயலா் ஜி.பிரகாஷ், சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.