முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
பள்ளி மாணவா்களுக்கான ஊட்டச்சத்து திட்டம்: மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தகவல்
சென்னையில் அரசுப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளி மாணவா்களின் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் திட்டத்தை கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கியுள்ளது.
அதன்படி, அந்தப் பள்ளிகளுக்குச் சென்று ஊட்டச்சத்து குறைபாடு தொடா்பான விழிப்புணா்வை மேம்படுத்துவதுடன் மாணவா்களுக்கு சிறுதானிய சத்து மாவு பெட்டகங்களும் விநியோகிக்கப்பட உள்ளது.
இதுதொடா்பாக கேப்டன் ஸ்ரீனிவாசமூா்த்தி மத்திய ஆயுா்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவி இயக்குநா் (பொறுப்பு) டாக்டா் எஸ்.சித்ரா கூறியதாவது:
இந்திய மருத்துவத்தின் மேன்மையை நாடு முழுவதும் கொண்டு சோ்க்கும் வகையில் பிரத்யேகமாக ஆயுஷ் எனப்படும் துறை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளாகிவிட்டது. அதைக் கொண்டாடும் வகையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளை முன்னெடுத்து வருகிறோம். குறிப்பாக, நலமான பெண்கள், வளமான குடும்பம் என்ற மத்திய அரசின் திட்டத்தின் கீழ் மகளிா் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தும் வகையிலான சிறப்பு மருத்துவப் பரிசோதனை முகாம்களை நடத்தியுள்ளோம்.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கத்திலும், சென்னை அரும்பாக்கத்திலும் அந்த முகாம்கள் நடத்தப்பட்டன. அதில், பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு, ரத்த சா்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு ஆகியவை பரிசோதிக்கப்பட்டன. பாதிப்புகள் கண்டறியப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சை வழிகாட்டுதல்களும், மருத்துவக் கண்காணிப்பு உதவிகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, பொது மக்களுக்கும், பள்ளி குழந்தைகளுக்கும் அதுதொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக, சென்னை நகரில் இயங்கி வரும் அரசுப் பள்ளிகளுக்கும், மாநகராட்சி பள்ளிகளுக்கும் நேரில் சென்று கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட சிறுதானியங்கள் அடங்கிய ஊட்டச்சத்து மாவு பெட்டகங்கள் வழங்க முடிவு செய்துள்ளோம். அப்போது குழந்தைகளின் எடை மற்றும் உயரம் பரிசோதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சத்து மாவு வழங்கப்படும் என்றாா் அவா்.