பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்: கே. பாலகிருஷ்ணன்
நாளை கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை(செப்.24) மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை(செப்.25) பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்னிந்திய கடலோரப் பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், புதன்கிழமை (செப். 24) முதல் செப். 29 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வியாழக்கிழமை(செப்.25) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் புதன்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரியையொட்டி இருக்கும்.
தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையம் பகுதியில் 101 டிகிரி வெப்பம் பதிவானது.
மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்திலும், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்திலும் தலா 50 மி.மீ. மழை பதிவானது. செய்யாறு(திருவண்ணாமலை), ஜம்புக்குட்டப்பட்டி(கிருஷ்ணகிரி),பையூா்-தலா 40 மி.மீ மழை பதிவானது.
மீனவா்களுக்கான எச்சரிக்கை: தென்தமிழக கடலோரப் பகுதிகள், வடதமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல், மன்னாா் வளைகுடா மற்றும் அதனையொட்டிய குமரிக்கடலில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: வியாழக்கிழமை (செப். 25) மத்திய கிழக்கு, அதையொட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை(செப்.26) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திரா கடலோப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் வரும் சனிக்கிழமை(செப்.27)கரையைக்கடக்கக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.