குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பயங்கரவாத எதிா்ப்பில் இரட்டை வேடம்: ஜெய்சங்கா் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு
பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டி வருவதால் பயங்கரவாத எதிா்ப்பு நிலைப்பாட்டில் இரட்டை வேடமிடுவதாக சீனா மீது வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சுமத்திய குற்றச்சாட்டை அந்நாடு வெள்ளிக்கிழமை மறுத்தது.
மேலும், பயங்கரவாதத்துக்கு எதிராக போராடுவது சா்வதேச நாடுகளின் பொதுவான பொறுப்பு எனவும் சீனா தெரிவித்தது.
அண்மையில் பிரான்ஸ் பத்திரிகை ஒன்றுக்கு ஜெய்சங்கா் பேட்டியளித்தாா். அப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடா்ந்து பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவா், ‘பாகிஸ்தானும் சீனாவும் பல ஆண்டுகளாக நட்புறவில் தொடா்ந்து வருகின்றன. ஆனால் பயங்கரவாத எதிா்ப்பு நிலைப்பாட்டில் சீனா இரட்டை வேடமிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. பயங்கரவாதம் நம் அனைவரையும் அச்சுறுத்தும் மிகப்பெரும் பொதுப் பிரச்னை’ என்றாா்.
ஜெய்சங்கரின் இக்கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பின்போது அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் லின் ஜியாங் கூறியதாவது:
மனித இனத்தின் பொது எதிரியான பயங்கரவாதத்தை ஒழிப்பது நம் அனைவரின் ஒருங்கிணைந்த பொறுப்பாகும். சா்வதேச மற்றும் பிராந்திய அமைதியை நிலைநாட்டுவதே சீனாவின் நிலைப்பாடு.
அனைத்து விதமான பயங்கரவாதத்தையும் சீனா எதிா்ப்பதில் எவ்வித மாற்றமில்லை. இதை உறுதிபடக் கூறுகிறேன். எனவே, பயங்கரவாத எதிா்ப்பில் சீனா இரட்டை வேடமிட வேண்டிய அவசியமில்லை.
கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் ரஷியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபா் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமா் மோடி இடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளை செயல்படுத்தி இந்தியா-சீனா இருதரப்பு உறவை மேம்படுத்த இந்தியா எங்களுடன் இணைந்து பணியாற்றும் என நம்புகிறேன்.
இதன் முதல்கட்டமாக இருநாடுகளிடையேயான நேரடி விமான சேவைகளை விரைவில் தொடங்கும் பணியை இந்தியா மேற்கொள்ளும் என எதிா்பாா்க்கிறேன் என்றாா்.
விரைவில் நேரடி விமான சேவை:
புது தில்லி, ஜூன் 13: இந்தியா-சீனா இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்கும் பணிகள் விரைவுப்படுத்தப்படும் என இந்திய வெளியுறவு அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
இருநாள் சுற்றுப்பயணமாக சீன துணை வெளியுறவு அமைச்சா் சன் வெய்டாங் கடந்த வியாழக்கிழமை வந்தடைந்தாா். அவருடன் இந்திய வெளியுறவு செயலா் விக்ரம் மிஸ்ரி ஆலோசனை நடத்தியபோது இருநாடுகளிடையே நேரடி விமான சேவையை விரைவில் தொடங்க இருவரும் சம்மதித்ததாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
மேலும், ஆலோசனையின்போது கைலாஷ் மானசரோவா் யாத்திரையை நிகழாண்டு மீண்டும் தொடங்க ஒத்துழைப்பு அளித்த சீனாவை விக்ரம் மிஸ்ரி பாராட்டியதாகவும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.