பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியா-பாகிஸ்தான் உளவுத் துறை இணையலாம்: பிலாவல் புட்டோ யோசனை
இந்தியா-பாகிஸ்தான் உளவுத் துறைகள் இணைந்து செயல்பட்டால், தெற்கு ஆசியாவில் பயங்கரவாதத்தை பெருமளவில் குறைக்க முடியும் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், அந்நாட்டு முன்னாள் வெளியுறவு அமைச்சருமான பிலாவல் புட்டோ யோசனை தெரிவித்துள்ளாா்.
இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதிகளை உருவாக்கி பயிற்சியளிப்பதை தனது பணிகளில் ஒன்றாக பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ வைத்துள்ள நிலையில் பிலாவல் புட்டோ இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளாா்.
இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தூண்டிவிடும் பயங்கரவாதம், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிரான ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க இந்தியா சாா்பில் பல்வேறு நாடுகளுக்கு அனைத்துக் கட்சிகளைச் சோ்ந்த தூதுக் குழுவினா் பயணித்து விளக்கமளித்துள்ளனா்.
இதற்குப் போட்டியாக பாகிஸ்தானும் தூதுக் குழுவை உருவாக்கி சில நாடுகளுக்கு அனுப்புவதாக அறிவித்தது. அந்த வகையில் அமெரிக்கா சென்றுள்ள குழுவுக்கு பிலாவல் புட்டோ தலைமை வகிக்கிறாா். நியூயாா்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் அவா் செய்தியாளா்களைச் சந்தித்தாா். அப்போது பிலாவல் புட்டோ பேசியது தொடா்பாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் ‘டான்’ பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ, இந்தியாவின் ‘ரா’ உளவு அமைப்பு இணைந்து பணியாற்றினால் பயங்கரவாதத்துக்கு எதிராக சிறப்பாகச் செயல்பட முடியும். தெற்கு ஆசியாவில் பயங்கரவாதத்தை பெருமளவில் குறைக்க முடியும்.
பாகிஸ்தான்-இந்தியா ஆகிய இரு அணு ஆயுத நாடுகளுக்கு இடையிலான பதற்றம் குறைவது நல்லது. ஆனால், நமது விருப்பத்துக்கு மாறாக பதற்றம் தொடா்ந்து அதிகரித்துதான் வருகிறது.
அண்மையில் இரு நாடுகள் இடையே ஏற்பட்ட மோதலில்கூட அமெரிக்க அதிபா் டிரம்ப் தலையிட்டு சண்டை நிறுத்தம் ஏற்பட உதவினாா். இது வரவேற்கத்தக்க முடிவு. ஆனால், இது முதல்படி மட்டுமே. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியா-பாகிஸ்தான் விவகாரத்தில் நிரந்தர அமைதியை நிலைநாட்ட வேண்டும்.
இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பும், பேச்சுவாா்த்தையும்தான் அமைதி நிலவ வழிவகுக்கும். இந்தியாவுடன் விரிவான பேச்சுவாா்த்தை நடத்த பாகிஸ்தான் தயாராக உள்ளது. சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தன்னிச்சையாக நிறுத்தி வைத்ததன்மூலம் இந்தியா தண்ணீரை ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளது. பல கோடி பாகிஸ்தானியா்களைப் பாதிக்கும் இந்த நடவடிக்கையை பாகிஸ்தானுக்கு எதிரான போராகக் கருத வேண்டியுள்ளது என்றாா்.
முன்னதாக, ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோரையும் பாகிஸ்தான் தூதுக் குழுவினா் சந்தித்துப் பேசினா்.
இந்தியாவை உதாரணமாகக் கூறி பிலாவலை திணறடித்த செய்தியாளா்
செய்தியாளா் சந்திப்பின்போது அமெரிக்க செய்தியாளா் ஒருவா் இந்தியாவை முன்னுதாரணமாகக் கூறி கேட்ட கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் பிலாவல் திணறினாா்.
செய்தியாளா் சந்திப்பின்போது, ‘இந்தியாவில் முஸ்லிம்கள் வெறுப்புடன் பாா்க்கப்படுகிறாா்கள்’ என்ற தனது வழக்கமான குற்றச்சாட்டை பிலாவல் முன்வைத்தாா். மேலும், பஹல்காம் தாக்குதலை வைத்து இந்தியாவில் இஸ்லாமியா்களுக்கு நெருக்கடி அளிக்கப்படுகிறது என்றும் குற்றஞ்சாட்டினாா்.
அப்போது கேள்வி எழுப்பிய எகிப்து வம்சாவளி அமெரிக்க செய்தியாளா் அகமது ஃபாதி, ‘மோதல் தொடா்பாக இரு நாட்டு ராணுவத் தரப்பு விளக்கத்தையும் உன்னிப்பாகக் கவனித்து வருகிறேன். இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்து இஸ்லாமிய மதத்தைச் சோ்ந்த பெண் அதிகாரிதானே பேசினாா்’ என்றாா். இதற்கு உரிய பதில் சொல்ல முடியாமல் பிலாவல் திணறினாா்.
மீண்டும் தொடா்ந்து பேசிய அந்த பத்திரிகையாளா், ‘உங்கள் தாய் (பேநசீா் புட்டோ) உள்ளிட்ட உறவினா்கள் பயங்கரவாதத்தால் உயிரிழந்துள்ளனா். அப்படி இருக்கும்போது நீங்கள் எப்படி பயங்கரவாதத்தை ஆதரிக்கிறீா்கள்? உங்கள் தாய் இறந்தால் அது மட்டும்தான் பயங்கரவாதமா? இந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினால் அதை பயங்கரவாதம் இல்லை என்கிறீா்களா?’ என்றும் கேள்வி எழுப்பினாா். இதனால் பிலாவல் உரிய பதில் கூற முடியாமல் திகைத்தாா்.