திமுக - அதிமுக வேட்பாளா்கள் 6 போ் மனு தாக்கல்: போட்டியின்றி தோ்வாக வாய்ப்பு!
ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு விலைமதிப்பற்ற ஈத் பரிசு!
ஜம்மு - காஷ்மீரில் கட்டப்பட்டுள்ள உலகின் மிக உயரமான உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு நிறைவடைந்ததையடுத்து பிரதமர் நரேந்திர மோடியால் இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது ஒரு வரலாற்றுத் தருணம் என்று பாஜகவின் ஜம்மு-காஷ்மீர் செய்தித் தொடர்பாளர் அல்தாஃப் தாக்கூர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது,
உதம்பூர்-பாரமுல்லா ரயில் இணைப்பு என்பது பொறியியலின் சாதனை மட்டுமல்ல, நம்பிக்கை, வளர்ச்சி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பின் சின்னமாகும். இது உண்மையிலேயே ஐம்மு-காஷ்மீருக்கு ஒரு வரலாற்றுத் தருணம்.
லட்சிய ரயில் திட்டமானது பிராந்தியத்தில் பயணத்தில் புரட்சியை ஏற்படுத்தும், சுற்றுலாவை அதிகரிக்கும் மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்குப் பொருளாதார வாய்ப்புகளை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.
ஜம்மு-காஷ்மீரின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான பிரதமர் மோடியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்கு இது மற்றொரு சான்று. இந்தத் திட்டம் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு சாதனைகளில் ஒன்றாகும் என்று தாக்கூர் பாராட்டினார். மேலும் இது அனைத்து தரப்பு மக்களுக்கும், குறிப்பாகத் தொலைதூர மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனளிக்கும் என்றார்.
நவீன போக்குவரத்து கட்டமைப்புகள் மூலம் காஷ்மீரை இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்குப் பார்வை நனவாகி வருகிறது. இந்த ரயில் இணைப்பு உண்மையில் ஜம்மு-காஷ்மீர் மக்களுக்கு ஒரு விலைமதிப்பற்ற ஈத் பரிசு என்று அவர் மேலும் கூறினார்.