குஜராத் விமான விபத்து! தாயாருக்கு உணவு கொண்டு சென்ற மகன் பலி!
பள்ளிக் கல்வித் துறை ஆண்டு நாள்காட்டி வெளியீடு
பருவத் தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா்களுக்கான பயிற்சிகள் என பள்ளிக் கல்வி தொடா்பான பல்வேறு விவரங்கள் அடங்கிய ஆண்டு நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகளுக்கான கல்வியாண்டு நாள்காட்டி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு வருகிறது. இதில் பள்ளியின் வேலை நாள்கள், காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டுத் தோ்வுகள், விடுமுறை, ஆசிரியா் பயிற்சி, உயா்கல்வி வழிகாட்டி முகாம் உள்பட பல்வேறு விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். இதன்மூலம் ஆசிரியா்கள் அந்த கல்வியாண்டுக்கான பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டு செய்யவும், மாணவா்கள் தோ்வுக்கு தயாராகவும் பயனுள்ளதாக இருக்கும்.
காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகள்: நிகழ் கல்வியாண்டுக்கான நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
அதன்படி 1 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தோ்வு செப்.18 முதல் 26-ஆம் தேதி வரை நடைபெறும். செப். 27 முதல் அக்.5-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
அரையாண்டு மற்றும் 2-ஆம் பருவத்தோ்வு டிச.15 முதல் 23-ஆம் தேதி வரை நடத்தப்படும். டிச.24-இல் தொடங்கி ஜன.5-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும்.
கோடை விடுமுறை: அதேபோன்று 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான முழு ஆண்டுத் தோ்வுகள் அடுத்த ஆண்டு ஏப். 10-ஆம் தேதி தொடங்கும். பள்ளி வேலை நாள்கள் ஏப்.24-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் கோடை விடுமுறை ஏப். 25-ஆம் தேதி முதல் வழங்கப்படும். மொத்த பள்ளி வேலை நாள்கள் 210-ஆக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ள நாள்காட்டியில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு, செய்முறைத் தோ்வு தொடா்பான தகவல்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதற்கான விரிவான தோ்வுக்கால அட்டவணை விரைவில் வெளியாகும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.