பழனி: சுகாதார சீர்கேட்டைச் சுட்டிக்காட்டிய விகடன்; சாக்கடைகளை மூடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் உள்ள காந்தி ரோடு சாலையானது பல்வேறு வணிக நிறுவனங்கள், கோயில்கள் மற்றும் காய்கறி மார்க்கெட் அமைந்துள்ள பிரதான சாலையாகும். இதே சாலையில்தான் மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகமும் அமைந்துள்ளது. இந்த சாலையில் இருந்து சங்கிலி தேவர் சந்துக்கு செல்லும் வழியில் சாக்கடையை பராமரிப்பதற்காக தோண்டப்பட்ட குழி, மீண்டும் சரி செய்யப்படாமல் அப்படியே இருந்தது.
இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்தபோது, ``சாக்கடையை பராமரிப்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பே இதனை தோண்டினார்கள்.

ஆனால் அதன் பிறகு இப்படியே தான் இருக்கின்றது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் இடையூறுக்கு உள்ளாகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் இந்த குழி இருப்பது தெரியாமல் தடுமாறுகின்றனர். இது போன்ற அச்சுறுத்தல்கள் அடிக்கடி நடக்கின்றன. அதேபோல் நான்கு சக்கர வாகனங்கள் இந்த தெருவின் வழியாகச் செல்ல முடிவதில்லை. இதனால் வேறு வழியாக சற்றி வர நேரிடுகிறது" என்று கூறினர்.
அருகாமையில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள், ``இதனால் எங்கள் வியாபாரமே கேள்விக்குள்ளாகும் அளவிற்கு ஆகிறது. ஏனென்றால் சாக்கடையின் துர்நாற்றம் மிக அதிகமாக வீசுவதால் வாடிக்கையாளர்கள் இங்கு அமர்ந்து தேநீர் அருந்தகூட முகம் சுளிக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் இப்படி திறந்து கிடக்கும் சாக்கடையால் அதிக அளவு நோய்த்தொற்று பரவும் அபாயம் ஏற்படுகிறது. மேலும் இந்த இடத்தில் மட்டுமல்ல, காந்தி ரோடு சாலையின் பல்வேறு பகுதிகளில் பராமரிப்புக்காக தோண்டப்பட்ட சாக்கடைகள் திறந்த நிலையிலேயே கிடக்கின்றன. அதிகாரிகள் உடனைடியாக நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும்" என்று வேதனை தெரிவித்தனர்.

எனவே சுகாதார சீர்கேடு ஏற்படுவதை தடுப்பதற்காகவும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுப்பதற்காகவும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை எழுப்பினர்.
இது குறித்து விகடனில் டிசம்பர் 15-ம் தேதி பழனி: `திறந்து கிடக்கும் சாக்கடையால் சுகாதார சீர்கேடு, அச்சுறுத்தல்' - கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டு இருந்தோம்.
விகடன் சுட்டிக்காட்டியதையடுத்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தற்போது இதனை சீரமைத்துக் கொடுத்துள்ளனர். இந்தச் சீரமைப்பு பணியின் காரணமாக அந்தப் பகுதியில் நிலவிவந்த சுகாதார சீர்கேட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.