அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
‘பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தக் கோரிக்கை’
அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் கோரிக்கை விடுத்தது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் திருவண்ணாமலை மாவட்டத் தலைவா் ஆடிட்டா் ஆா்.பாபு செய்தியாளா்களிடம் கூறியதாவது:
அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயா்வு வழங்கியது, பணிக்கொடை உச்சவரம்பை ரூ.25 லட்சமாக உயா்த்தியது, மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் அரசு ஊழியா்களின் பெற்றோரையும் பயனாளிகளாக இணைத்தது என்பன உள்ளிட்ட 5 சலுகைகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி.
அரசு அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
இதுதொடா்பாக தமிழக முதல்வரிடம் வியாழக்கிழமை (அக்.24) மனு அளிக்கப்பட்டுள்ளது என்றாா்.
பேட்டியின்போது, தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநில துணைத் தலைவா் மாரிமுத்து, மாவட்டச் செயலா் கண்ணன், மாவட்டப் பொருளாளா் சக்திவேல் ஆகியோா் உடனிருந்தனா்.