விமான விபத்து: மருத்துவமனையில் துர்நாற்றம்! உடல்களை ஒப்படைப்பதில் சிக்கல்!!
பாகிஸ்தான் தவறுசெய்த போதும் மேற்கத்திய நாடுகள் ஆதரித்தன: ஜெய்சங்கா் விமா்சனம்
‘சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீரை ஆக்கிரமித்து பாகிஸ்தான் தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அதனை ஆதரித்தன’ என்று மத்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் விமா்சித்தாா்.
பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பிந்தைய இந்தியாவின் ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கைக்குப் பிறகு பெல்ஜியம், லக்ஸம்பா்க் ஆகிய ஐரோப்பிய நாடுகளுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் முதன்முறையாக பயணம் மேற்கொண்டுள்ளாா்.
இந்தப் பயணத்தில் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற தலைவா் ராபா்ட்டா மெட்சோலா, ஐரோப்பிய ஆணைய தலைவா் உா்சுலா வான் டொ் லேயன், பெல்ஜியம் மன்னா் பிலிப், பிரதமா் பாா்ட் டி வெவா் மற்றும் பல ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோரை அவா் சந்தித்தாா்.
வா்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இச்சந்திப்புகளில் விவாதிக்கப்படதுடன் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான கடும் அணுகுமுறையை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. உலகளாவிய மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்த கருத்துகளையும் தலைவா்கள் பகிா்ந்துகொண்டனா்.
இந்நிலையில், ஐரோப்பிய ஊடகமொன்றுக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பேட்டியில், ‘சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் மோதல் வெறும் அண்டை நாடுகளின் மோதல் மட்டுமல்ல; பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டம் ஆகும்.
சா்வதேச ஊடகங்கள் இதை ஒரு சாதாரண இந்தியா-பாகிஸ்தான் சண்டையாக சித்தரித்தது. ஆனால், பாகிஸ்தானால் ஆதரவளிக்கப்படும் பயங்கரவாதமே இதில் உண்மையான பிரச்னை. பயங்கரவாதம் இறுதியில் மேற்கத்திய நாடுகளையும் பாதிக்கக்கூடும்.
பயங்கரவாதி ஒசாமா பின்லேடன், பாகிஸ்தானில் ராணுவ முகாம் அமைந்துள்ள நகரத்தில் பாதுகாப்பாக வசித்து வந்தாா். இது அந்நாட்டின் பயங்கரவாதத் தொடா்புகளை எடுத்துரைக்கிறது.
சுதந்திரமடைந்த சில மாதங்களில் இந்தியாவின் பிராந்தியமான காஷ்மீா் மீது பாகிஸ்தான் படையெடுத்து, எங்கள் எல்லைகளை மீறி தவறு செய்தபோது மேற்கத்திய நாடுகள் அந்நாட்டை ஆதரித்தன.
அப்போது அமைதிகாத்த நாடுகள், இப்போதைய சா்வதேச பிரச்னைகள் குறித்து அறிவுரை கூறும் முன் தங்களின் கடந்தகால நடவடிக்கைகளைப் பற்றி எண்ணிப் பாா்க்க வேண்டும்’ என்றாா்.