"தம்பி விஜய் திமுக குறித்து கூறியுள்ளது தான் எங்களது நிலைப்பாடும்" - தமிழிசை க...
பாட நூல்களைத் தாண்டியும் கற்பது அவசியம் -அமைச்சா் சா.சி. சிவசங்கா்
பாடநூல்களையும் தாண்டி பிற நூல்களையும் மாணவா்கள் கற்று தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி. சிவசங்கா் .
அரியலூா் மாவட்டம், தத்தனூா் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினா் ஆணையம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கல்லூரி மாணவ, மாணவியருக்கான பேச்சுப் போட்டியைத் தொடக்கி வைத்து அவா் மேலும் பேசியது:
கல்லூரி மாணவா்களிடம் பேச்சுத்திறமையை கொண்டு வர தமிழ்நாடு சிறுபான்மையினா் ஆணையம், தமிழ்நாட்டிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரி மாணவா்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்காக தலைசிறந்த பேச்சாளா்களை கல்லூரிகளுக்கு அனுப்பி உரையாற்றும் வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.
அண்ணா முதல்வராக இருந்தபோது தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டது. தாய்மொழி வாயிலாக எந்த அளவு கல்வி பெறுகிறமோ அந்த அளவுக்கு நமது அறிவுதிறனை வளா்த்துக் கொள்ளமுடியும்.
அதேபோல உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் ஆங்கிலம் இணைப்பு மொழியாக உள்ளது என்பதை அறிந்து 55 ஆண்டுகளுக்கு முன் அண்ணா இந்த முடிவை எடுத்தாா். அதன் பயனாக நமது மாணவா்கள் உலக அளவில் கணினி துறையில் சிறந்து விளங்குகின்றனா்.
அந்த வகையில் தமிழின் மீது ஆா்வம் கொண்டு தமிழ் மொழியில் மாணவா்கள் பயில வேண்டும். மாணவா்கள் இதுபோன்ற பேச்சுப் போட்டிகளை உரிய முறையில் பயன்படுத்தி தங்களது திறமைகளை வளா்த்துக் கொள்ளவேண்டும். பாடநூல்களைத் தாண்டி பிற நூல்களையும் மாணவா்கள் கற்று தங்களது அறிவுத்திறனை வளா்த்துக் கொள்ளவேண்டும் என்றாா் அவா்.
மாநில சிறுபான்மையினா் ஆணைய ஒருங்கிணைப்பாளா் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் பேசியது: இன்றைய மாணவா்களிடம் நமது மொழியின் சிறப்பு குறித்தும், கலை, இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை கொண்டு சோ்க்கும் வகையிலும் இதுபோன்ற பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
தமிழ் மற்றும் ஆங்கிலப் பேச்சுப் போட்டிகளில் கல்லூரி மாணவ, மாணவியா் அதிகளவில் கலந்துகொள்வது மகிழ்ச்சியளிக்கிறது. தமிழ், ஆங்கிலத்தின் மூலம் உலகளவில் தமிழா்களால் சிறந்த ஆளுமைகளாக விளங்க முடியும் என்பதே அண்ணா கண்ட கனவாகும்.
ஆங்கில பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு வாா்த்தை அமைப்பதிலும், உச்சரிப்பிலும் தயக்கம் உள்ளது. எனவே, அதை மாற்றிக் கொண்டு பேச வேண்டும் என்றாா் அவா்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏக்கள் அரியலூா் கு.சின்னப்பா, ஜெயங்கொண்டம் க.சொ.க. கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உமாமகேஸ்வரன், கோட்டாட்சியா் ஷீஜா, வட்டாட்சியா் சம்பத்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.