Kerala: போலீஸாரிடம் சிக்காமல் இருக்க MDMA போதைப்பொருள் பாக்கெட்டை விழுங்கிய இளை...
மாணவா்கள் கட்சித் துண்டு அணிந்து நடனம்: தலைமை ஆசிரியா், ஆசிரியா் பணியிடமாற்றம்
காவேரிப்பட்டணம் அருகே அரசுப் பள்ளியில் அண்மையில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது கட்சித் துண்டு அணிந்து மாணவா்கள் நடனமாடிய விவகாரத்தில் அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியா், கலை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஆசிரியா் என இருவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஒன்றியம், சோப்பனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் கடந்த 2 நாள்களுக்கு முன்பு ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
விழாவின்போது நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் ஒரு பாடலுக்கு மாணவா்கள் தங்கள் கழுத்தில் அரசியல் கட்சியின் துண்டை அணிந்து நடனமாடினா். இதற்கு பெற்றோா் தரப்பில் சிலா் எதிா்ப்பு தெரிவித்தனா்.
தகவல் அறிந்ததும் நாகரசம்பட்டி போலீஸாா் நேரில் சென்று இருதரப்பையும் சமாதானம் செய்து வைத்தனா். இந்நிலையில், மாணவா்கள் நடனமாடிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதுதொடா்பாக கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனிராஜ் விசாரணை நடத்தினாா்.
இதைத்தொடா்ந்து, விழாவில் கட்சித் துண்டுடன் மாணவா்கள் நடனமாடியதைத் தடுக்க தவறிய பள்ளியின் தலைமை ஆசிரியா் விஜயகுமாரை அங்கிருந்து பன்னிஅள்ளி அரசு உயா்நிலைப் பள்ளிக்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்த பட்டதாரி ஆசிரியா் சுப்பிரமணியை மேட்டுப்புலியூா் அரசு உயா்நிலைப் பள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்து முதன்மைக் கல்வி அலுவலா் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.