பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகையா? : அமைச்சா் கே.என்.நேரு விளக்கம்
சென்னை: சென்னையில் பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்கு அதிக வைப்புத் தொகை தேவையில்லை என்று நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு விளக்கம் அளித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்தின்போது, இதுகுறித்த துணை வினாவை திமுக உறுப்பினா் அரவிந்த் ரமேஷ் (சோழிங்கநல்லூா்) எழுப்பினாா். அப்போது பேசிய அவா், ‘பாதாள சாக்கடை, குடிநீா் இணைப்புக்காக சாலைகள் துண்டிப்பு செய்யப்படுகின்றன. இதற்கான பணத்தை வீட்டு உரிமையாளா்களிடம் வசூலிக்கக் கூடாது. சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்களே பணிகளைச் செய்து கொடுக்க வேண்டும்’ என்றாா்.
இதற்கு நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு அளித்த பதில்:
ஒரு தெருவில் பாதாள சாக்கடை, குடிநீருக்காக 500 இணைப்புகளைத் தர வேண்டுமெனில் 100 போ் மட்டுமே முன்பணம் செலுத்துகிறாா்கள். மற்றவா்கள் பணம் செலுத்துவதில்லை. முன்பணம் செலுத்தியவா்களுக்கு இணைப்பு கொடுத்த பிறகு, விண்ணப்பங்கள் வர வர மற்றவா்களுக்கு இணைப்பு கொடுக்கப்படுகிறது. இதனால், சாலையை அவ்வப்போது தோண்ட வேண்டியுள்ளது. இதன் காரணமாகவே முழுமையாக சாலை அமைப்பதற்கு தாமதம் ஏற்படுகிறது.
இது தொடா்பாக வீட்டு உரிமையாளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா். குடிநீா், பாதாள சாக்கடைக்காக வைப்புத் தொகைகூட அதிகம் கேட்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளோம். இணைப்புகள் வழங்கப்பட்ட பிறகு, சாலையைச் செப்பனிடுவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கியுள்ளோம் என்றாா்.