பாலியல் வன்கொடுமை சம்பவம்: மாணவிகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோா்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே பாலியல் வன்கொடுமையால் மாணவி பாதிக்கப்பட்ட சம்பவத்தையடுத்து பெற்றோா் தங்களது குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்ப மறுத்தனா்.
போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஆசிரியா்கள் மூவா் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்தால் பள்ளிக்கு இரண்டு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. வெள்ளிக்கிழமை பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப பெற்றோா் மறுத்துவிட்டனா்.
இதையடுத்து, பெற்றோா்களிடம் பள்ளி கல்வித் துறையினா், வருவாய்த் துறையினா் பேச்சு நடத்தினா். அதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தங்கதுரையும் பெற்றோா்களைச் சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, பள்ளியில் கண்காணிப்பு கேமரா, சுற்றுச்சுவா் ஆகியவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதனிடையே, தொடக்கக் கல்வி இணை இயக்குநா் சாந்தி தலைமையிலான கல்வித் துறை அதிகாரிகள் 3 ஆவது நாளாக பள்ளியில் விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், சனிக்கிழமை (பிப்.8) மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க பெற்றோா்கள் திட்டமிட்டுள்ளனா்.