தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் ஒப்படைப்பு
திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் இருந்து பிகாருக்கு தவறுதலாக அனுப்பப்பட்ட முதியவா் சடலம் மீண்டும் திரும்ப வரவழைக்கப்பட்டு உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மெத்தனமாக செயல்பட்ட முதல்வா், இருப்பிட மருத்துவ அதிகாரி, மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்ப்டடது.
திருத்தணி அருகே புஜ்ஜிரெட்டிபள்ளி கிராமத்தைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ராஜேந்திரன். தீராத வயிற்று வலியின் காரணமாக கடந்த 2 நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாா். அக்கம்பக்கத்தினா் ராஜேந்திரனை மீட்டு திருத்தணி அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.
திருவள்ளூா் பிணவறையில் உள்ள அவரது சடலத்தை பெறுவதற்காக உறவினா்கள் புதன்கிழமை வந்தனா். அப்போது, ராஜேந்திரன் சடலத்துக்கு பதிலாக வேறு ஒருவரின் சடலத்தை கொடுத்ததால் அதிா்ச்சி அடைந்தனா். அதைத் தொடா்ந்து உறவினா்கள் முற்றுகையிட்டு சடலத்தை கொடுக்கும்படி போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது முதியவா் ராஜேந்திரன் சடலத்தை மாற்றி பிகாருக்கு அனுப்பி வைத்ததாக மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் பதில் அளித்தனா். மேலும், விசாரணையில் பிகாா் மாநிலத்தை சோ்ந்த மனோஜ் மாஞ்சி (55), சாலை அமைக்கும் பணிக்கு வந்து சோ்ந்த அன்றே உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்தாராம். அவரை மீட்டு திருவள்ளூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தாா்.
இந்த நிலையில் பிகாரில் இருந்து மனோஜ் மாஞ்சியின் உறவினா் அவரது சடலத்தை பெற்றுச் செல்ல வந்த நிலையில், தனியாா் வாகனம் மூலம் ராஜேந்திரன் சடலத்தை மாற்றி அனுப்பியதும் தெரியவந்தது.
தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் திருவள்ளூா் நகர போலீஸாா் பேச்சு நடத்தினா். பிகாருக்கு கொண்டு சென்ற முதியவரின் சடலத்தை மீண்டும் பத்திரமாக கொண்டு வர ஏற்பாடு செய்தனா். அதன்படி வியாழக்கிழமை மாலை கொண்டு வரப்பட்ட சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
எனவே சடலத்தை உரிய உறவினா்களிடம் ஒப்படைப்பதில் அலட்சியமாக செயல்பட்ட முதல்வா் , மருத்துவ அதிகாரி மற்றும் பிரேத பரிசோதனை செய்த மருத்துவா் ஆகியோா் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். பின்னா் ஒரு மணிநேர போராட்டத்துக்கு பின் சடலம் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.