அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
புதிய பலா ரகங்கள் அறிமுகம்
கடலூா் மாவட்டம், பண்ருட்டி பகுதி விவசாயிகளிடம் இருந்து இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூா்) மூலம் புதிய இரண்டு பலா ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநா் சௌ.அருண் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பண்ருட்டி வட்டாரம் பலா சாகுபடிக்கு பெயா் பெற்றது. இங்கு சுமாா் 550 ஹெக்டோ் பரப்பளவில் பலா விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை மூலமாக செயல்படுத்தப்படும் பலா இயக்கத்தின் கீழ், சிறப்பு முயற்சியாக புதிய ரகங்களை அறிமுகம் செய்யும் பொருட்டு, கடலூா் தோட்டக்கலை துணை இயக்குநா் சௌ.அருண் மற்றும் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானி கருணாகரன் ஆகியோா் இணைந்து, பண்ருட்டி பகுதியில் ஆய்வு மேற்கொண்டனா்.
இந்த ஆய்வில், பத்திரக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த பி.ஹரிதாஸ், கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்த வை.திருமலை ஆகிய பலா விவசாயிகளின் தோட்டத்தில் இருந்து இரண்டு சிறப்பு ரகங்கள் கண்டறியப்பட்டன.
பெங்களூரில் கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் (பெங்களூா்) மூலமாக ஹரி கோல்டு மற்றும் திருமலா என்ற பெயரில் புதிய ரகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பலா மரங்களின் உரிமையாளா்களான பி.ஹரிதாஸ், வை.திருமலை ஆகியோருடன் இந்திய தோட்டக்கலை ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு புதிய ரகங்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்து பரவலாக்க புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.