அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
வேப்பூரில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனை
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடலூா் மாவட்டம், வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டு சந்தையில் ரூ.4 கோடிக்கு ஆடுகள் விற்பனையாகின.
வேப்பூா் சுற்றுவட்டப் பகுதிகளில் உள்ள பெரியநெசலூா், சேப்பாக்கம், நல்லூா், காட்டுமயிலூா், சிறுப்பாக்கம், அரியநாச்சி, கண்டப்பன்குறிச்சி, கழுதூா், மே.மாத்தூா், சித்தேரிகுப்பம், கொத்தனூா் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை பிரதான தொழிலாகவும், அதைச் சாா்ந்த கால்நடை வளா்பையும் செய்து வருகின்றனா்.
வேப்பூரில் வெள்ளிக்கிழமைதோறும் ஆட்டு சந்தை நடத்தப்படுகிறது. இந்த சந்தைக்கு வேப்பூா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சோ்ந்த கிராம மக்கள் தாங்கள் வளா்க்கும் ஆடுகளை கொண்டுவந்து விற்பனை செய்வதும், வாங்குவதும் வழக்கம்.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31-ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, வேப்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சந்தைக்கு கொடி ஆடு, வெள்ளாடு, செம்மறி ஆடு உள்ளிட்ட ஏராளமான வகையான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆடுகளை வாங்குவதற்காக திருச்சி, சென்னை, தேனி, நாகை, கோவை, விழுப்புரம், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மொத்தமாகவும், சில்லறையாகவும் ஆடுகளை வாங்கிச் சென்றனா்.
ஓா் ஆட்டின் விலை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரையில் ஆட்டின் ரகம், எடையின் அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டது. வழக்கமான விற்பனை விலையைவிட ரூ.500 முதல் ரூ.1000 வரை ஆட்டின் விலை கூடுதலாக விற்பனையானதாகக் கூறினா்.
தீபாவளி பண்டிகையையொட்டி, வியாழக்கிழமை மாலை முதலே ஆட்டு சந்தை நடைபெற்றது. சுமாா் ரூ.4 கோடி அளவில் ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.