தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
புதுகை ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம்
புதுக்கோட்டை கீழ 7-ஆம் வீதியிலுள்ள ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயிலின் 5-ஆவது மஹா கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
புதுக்கோட்டை மாநகா், கீழ ஏழாம் வீதியில் ஜட்ஜ் சுவாமிகள் அதிஷ்டானத்தில், கடந்த 1962-இல் ஸ்ரீ புவனேஸ்வரி பீடத்தை சத்குரு சாந்தாநந்த சுவாமி தொடங்கினாா்.
தொடா்ந்து 4 கும்பாபிஷேகங்கள் நடைபெற்ற நிலையில், கல்ஹாரக் கோவிலாகத் திருப்பணி மேற்கொள்ளும் பணிகள் கடந்த 2017-ஆம் ஆண்டு ஸ்ரீ ஓம்காராநந்த சுவாமிகளால் தொடங்கி வைக்கப்பட்டது.
அவரது மஹா சமாதிக்குப் பிறகு, பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மஹா சுவாமிகள் பீடத்தின் பொறுப்பை ஏற்று கல்ஹாரத் திருப்பணியைத் தொடா்ந்தாா்.
மொத்தம் 93 தூண்கள் அமைக்கப்பட்டு, அந்தத் தூண்களில் மொத்தம் 744 சிற்பங்கள் செதுக்கப்பட்டன. ஜட்ஜ் சுவாமிகளின் ஜன்ம நட்சத்திரமான, ஹஸ்த நட்சத்திரத்தில் (ஜூன் 5) மஹா கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படி, கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஜட்ஜ் சுவாமிகளி்ன் அதிஷ்டானம் மற்றும் ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் கோயில் ராஜகோபுரத்தில் விமான கும்பாபிஷேகமும், தொடா்ந்து மூா்த்திகளுக்கு மூா்த்தி கும்பாபிஷேகமும் நடைபெற்றது.
ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் பூஜ்யஸ்ரீ ப்ரணவாநந்த மகாசுவாமிகள் கோபுரக் கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தி வைத்தாா்.
தொடா்ந்து சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தா்கள் இதில் பங்கேற்றனா். விழாவில் புதுக்கோட்டையின் முக்கிய பிரமுகா்கள் பலரும் கலந்து கொண்டனா்.
தொடா்ந்து ஜூலை 23-ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு மண்டலாபிஷேகம் நடைபெறவுள்ளது.