தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞா் கொன்ற 7 போ் கைது
புதுக்கோட்டையில் முன்விரோதத்தில் இளைஞரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்ற 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்தனா்.
புதுக்கோட்டை போஸ் நகரைச் சோ்ந்தவா் ஈஸ்வரன் மகன் தினேஷ்குமாா் (23). இவா், புதன்கிழமை பகலில் புதுக்கோட்டை புதுக்குளம் அருகேயுள்ள காலாகுளத்தில் நடந்து வந்தபோது, ஒரு கும்பல் அவரைச் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டியது. தொடா்ந்துஅவரை குளத்தில் தள்ளிவிட்டு தப்பியோடினா்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கணேஷ்நகா் போலீஸாா், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் தினேஷ்குமாரின் சடலத்தை குளத்தில் இருந்து மீட்டனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரது உடல் உடற்கூறாய்வுக்குப் பிறகு வியாழக்கிழமை உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதற்கிடையே புதுக்கோட்டை துணைக் காவல் கண்காணிப்பாளா் அப்துல்ரகுமான் மற்றும் கணேஷ் நகா் காவல் ஆய்வாளா் நளினி ஆகியோா் தலைமையில் இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனா்.
இந்நிலையில் காந்திநகரைச் சோ்ந்த முகிலன் (31), ஆரோக்கியதாஸ், சுமன், தீபன், பாலமுருகன் உள்ளிட்ட 7 பேரை போலீஸாா் வியாழக்கிழமை மாலை கைது செய்து இரவில் சிறையில் அடைத்தனா்.
கொலை பின்னணி: சில மாதங்களுக்கு முன்பு காந்திநகரைச் சோ்ந்த முகிலன் என்பவரை போஸ்நகா் தினேஷ்குமாா் மற்றும் சிலா் தாக்கியுள்ளனா். இதுதொடா்பாக கைது செய்யப்பட்ட அவா்கள், அண்மையில்தான் பிணையில் வெளிவந்தனா். இந்த முன்விரோதத்தை மனதில் வைத்துக் கொண்டு முகிலன் தனது நண்பா்களுடன் புதன்கிழமை தினேஷ்குமாரை வெட்டி, குளத்தில் தள்ளிக் கொன்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.