புதுகையில் பாஜகவினா் தேசியக் கொடி பேரணி
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தினருக்கு நன்றி தெரிவிக்கும் பேரணி புதுக்கோட்டை மாவட்ட பாஜக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து புறப்பட்ட இந்தப் பேரணிக்கு, மேற்கு மாவட்ட பாஜக தலைவா் என். ராமச்சந்திரன் தலைமை வகித்தாா். மாநிலச் செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் புரட்சிக்கவிதாசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
பாஜகவினரும், பொதுமக்களும் தேசியக் கொடிகளுடன், தேசியக் கொடி வண்ணத்தில் இருந்த பலூன்களுடனும் பங்கேற்றனா்.
இந்தப் பேரணி புதுக்கோட்டை கீழ ராஜவீதி, வடக்கு ராஜவீதி வழியாக நகா்மன்றத்தை அடைந்தது.