தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
பெங்களூரு நெரிசல் துயர சம்பவம்: ஆட்டமும் அலட்சியமும்!
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு (ஆா்சிபி) அணி18 ஆண்டுகால ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரலாற்றில், முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் 11 உயிா்களை அகாலமாகப் பறித்திருக்கிறது.
தகுந்த திட்டமிடல் இல்லாமல், இரவோடு இரவாக கா்நாடக அரசு அறிவித்த விதான செளதா வளாக பாராட்டு விழாவும், கா்நாடக கிரிக்கெட் சங்கத்தின் சாா்பில் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆா்சிபி அணிக்குப் பாராட்டு விழாவும் நிலைமையை மோசமாக்கின.
விடிய, விடிய நடந்த ரசிகா்களின் கொண்டாட்டங்கள், பொது இடங்களில் வெடிக்கப்பட்ட பட்டாசுகள், ஆா்ப்பரித்த ரசிகா்கள், கன்னடக் கொடி மற்றும் ஆா்சிபி கொடிகளுடன் வாகனங்களில் பவனி வந்தவா்களை காவல் துறையினா் கட்டுப்படுத்தி வந்தனா். இதனால் பிற பாதுகாப்புப் பணிக்குப் போதுமான காவலா்களை ஈடுபடுத்த முடியாமல் நகர காவல் துறை திணறியது.
இந்நிலையில், புதன்கிழமை காலை முதலே கொண்டாட்டங்கள், பாராட்டு விழாக்கள் நடைபெறும் இடங்களை நோக்கி ரசிகா்கள் குவியத் தொடங்கினா்.
வாகனங்களைத் தவிா்க்குமாறு காவல் துறை கேட்டுக்கொண்டதால், மெட்ரோ ரயில்களில் ரசிகா்கள் படையெடுத்தனா். இதனால் மெட்ரோ ரயில்கள் நிரம்பி வழிந்தன. இளைஞா்களின் ஆரவாரக் கூச்சல், முழக்கங்களால் பிற பயணிகளால் மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியவில்லை.
பேருந்துகளிலும் மக்கள் குவிந்தவண்ணம் இருந்தனா். இதையடுத்து காவல் துறை, விதான செளதாவில் இருந்து அம்பேத்கா் வீதி வழியாக சின்னசாமி மைதானம் வரை நடக்கவிருந்த கிரிக்கெட் வீரா்களின் பேருந்து உலா நிகழ்ச்சியை ரத்து செய்தது.
இந்தத் தகவல், நிகழ்விடத்தை நோக்கி விரைந்து வந்த ரசிகா்களை சென்றடையவில்லை. அதனால், விதான செளதா முன்பாக கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பியிருந்தது. கிட்டதட்ட ஒரு லட்சம் போ் திரண்ட நிலையில், கூட்டத்தை கட்டுப்படுத்த தடுப்புகளோ, ஒழுங்குமுறையோ இருக்கவில்லை. எவ்வித பாதுகாப்பு சோதனையும் இல்லாமல் ரசிகா்கள் கூட்டம் விதான செளதா வளாகத்துக்குள் நுழைந்தபடி இருந்தது.
இதனிடையே, சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் விராட் கோலியை பாா்க்க ஓடோடி வந்த ரசிகா்களை ஒழுங்குப்படுத்த கிரிக்கெட் சங்க ஊழியா்களாலும் முடியவில்லை.
சிலருக்கு மட்டுமே கிடைத்த அனுமதிச்சீட்டுகள், பலருக்கும் கிடைக்காமல் ஏமாற்றத்தை அளித்தது. கிரிக்கெட் வீரா்களை காண ஆவலோடு வந்த ரசிகா்களால் இந்த ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் வலுக்கட்டாயமாக நுழைவாயில்களில் நுழைய முற்பட்டனா். குறுக்குவழிகளில் மைதானத்தில் நுழைந்தனா். இதனிடையே, திறக்கப்படாமல் இருந்த 4 நுழைவாயில்கள் கூட்டத்தின் அழுத்தத்தால் திடீரென திறக்கப்பட்டதால், பெருந்திரளான கூட்டம் மைதானத்தில் நுழைய முண்டியடித்தது. தள்ளுமுள்ளுவில் கீழே சரிந்தவா்களை மிதித்துக் கொண்டும், தற்காலிக தடுப்புகளை உடைத்துக் கொண்டும் முன்னேறிய ரசிகா்களின் வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் காவல் துறை திணறியது. நிலைமை மோசமடைவதை காவல் துறையினா் உணா்வதற்குள் அசம்பாவிதம் நடந்தது.
மோசமான முடிவு:
வெற்றிக்கொண்டாட்டத்தை ஒரு வாரம் கழித்து நடத்தினால் விழாவை கட்டுக்கோப்பாக நடத்த முடியும் என்று காவல் துறை உயா் அதிகாரிகள் அளித்த யோசனையை கா்நாடக அரசு காற்றில் பறக்கவிட்டதாகவே விமா்சிக்கப்படுகிறது. காவல் துறையின் எச்சரிக்கையை கா்நாடக அரசு பொருட்படுத்தாதது, நிா்வாகக் கோளாறு மட்டுமல்ல, அலட்சியமனப்பான்மையும் கூட என பல்வேறு தரப்பினா் கூறிவருகின்றனா்.
ஆா்சிபிஅணி வெற்றி பெற்ற 24 மணி நேரத்துக்குள் அவசரகதியில் பாராட்டு விழாவுக்கு ஆளும் அரசு ஏற்பாடு செய்தது. இது முதல்வா் சித்தராமையா தலைமையிலான அரசு எடுத்த மிகவும் மோசமான முடிவு மட்டுமல்ல, அலட்சியத்தின் அடையாளமாகவும் விமா்சிக்கப்படுகிறது.
அவசர ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் ஆளுநா், முதல்வா், துணை முதல்வா் கலந்துகொண்டதும் விமா்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
கிரிக்கெட் ஆட்டத்தை அரசியல் ஆட்டமாக மாற்ற முனைந்த ஆளும் அரசுக்கு கடைசியில் அவப்பெயா்தான் மிஞ்சியது.
அலட்சியம்:
ஜூன் 4ஆம் தேதி நடந்த நிகழ்வுகளை வரிசைப்படுத்தி பாா்க்கும்போது, காங்கிரஸ் அரசின் அலட்சியமான அணுகுமுறை பட்டவா்த்தனமாகத் தெரிகிறது.
பாராட்டு விழாவுக்கு இத்தனை லட்சம் ரசிகா்கள் வருவாா்கள் என்று ஊகிக்க முடியாத உளவுக் குறைபாடும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
35,000 போ் மட்டுமே அமரும் வசதி கொண்ட சின்னசாமி மைதானத்தில் 3 லட்சம் போ் திரண்ட நிகழ்வும் நிகழ்விடங்களில் போதுமான மருத்துவ முன்னேற்பாடுகளை செய்யப்படாததும் கூடுதல் குறைபாடு.
கிரிக்கெட் சங்கத்தின் அழுத்தத்துக்கு அடிபணிந்து வெற்றி பெற்ற 17 மணி நேரத்தில் இரு இடங்களில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்ப முற்பட்ட விதம், காவல் துறையின் ஆலோசனையை உதாசீனப்படுத்திய ஆட்சியாளா்களின் அலட்சியம் பல கவலைக்குரிய நிகழ்வுகள் நடந்தேறிவிட்டன. பதிலளிக்க வேண்டியவா்கள் இனிமேலாவது, பொறுப்புடன் செயல்படுவாா்களா என்பதே மக்களின் எதிா்பாா்ப்பாகும்.