செய்திகள் :

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள்! முழு விவரம்!

post image

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பளித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதிஷ், மணிவண்ணன், அருண்பால், பாபு, அளுளானந்தம், அருண்குமார் ஆகியோர் குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்திருந்த நீதிமன்றம், அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ தரப்பு வழக்குரைஞர் சுரேந்திர மோகன் பேசுகையில், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிறப்பான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்ற காவலில் உள்ள ஒன்பது பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் பாதிக்கப்பட்டு சாட்சியளித்த பெண்களுக்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் 85 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும், இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் சிறப்பாக முன்வைக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும் சிபிஐ விசாரணை துவங்கியது முதல் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்கள் பாதுகாக்கப்பட்டு உரிய வகையில் வழக்கு நடத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

ஆயுள் தண்டனை விபரம்

முதல் குற்றவாளி சபரிராஜனுக்கு 4 சாகும்வரை ஆயுள் தண்டனையும், இரண்டாவது குற்றவாளி திருநாவுக்கரசுக்கு சாகும்வரை 5 ஆயுள் தண்டனையும் 3வது குற்றவாளி சதீஷ்-க்கு சாகும்வரை மூன்று ஆயுள் தண்டனையும் 4வது குற்றவாளி வசந்தகுமாருக்கு சாகும்வரை இரண்டு ஆயுள் தண்டனையும், 5-வது குற்றவாளி மணிவண்ணனுக்கு சாகும்வரை ஐந்து ஆயுள் தண்டனையும் ஆறாவது குற்றவாளி பாபுவுக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் ஏழாவது குற்றவாளி ஹெரன்பாலுக்கு சாகும்வரை மூன்று ஆயுள் தண்டனையும் எட்டாவது குற்றவாளி அருளானந்தத்துக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் 9வது குற்றவாளி அருண்குமாருக்கு சாகும்வரை ஒரு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை 8.30 மணி அளவில் சேலம் மத்திய சிறையில் இருந்த 9 பேரும் கோவை நீதிமன்றத்திற்கு பாதுகாப்பாக அழைத்துவரப்பட்டனர். அதனை தொடர்ந்து நீதிபதி ஆர்.நந்தினிதேவி வந்தார்.

காலை 10 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்த சிபிஐ தரப்பு அரசு வழக்குரைஞர் சுரேந்திர மோகன், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட தீர்ப்பினை வரவேற்று நீதிமன்ற வளாகத்தில் மாதர் சங்கத்தினர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த கைது செய்யப்பட்டவர்கள் தரப்பு வழக்குரைஞர் பாண்டியராஜன் பேசுகையில், தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுக உள்ளதாகத் தெரிவித்தனர்.

வழக்கு விபரம்

கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அதனை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்றது.இதில், கைது செய்யப்பட்ட 9 பேர் மீது பாலியல் வன்கொடுமை, கூட்டுச்சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, கோவை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 8-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை விடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்செயல் நடந்தது. இதில் பாதிக்கப்பட்ட இளம்பெண்கள் புகாரின்பேரில், பொள்ளாச்சி கிழக்கு போலீசார் முதலில் வழக்குப்பதிந்து விசாரித்தனர். பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, அதன்பிறகு, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில், பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய 5 பேர் 2019ல் கைது செய்யப்பட்டனர். ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 4 பேர் கடந்த 2021ல் கைதாகினர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், கூட்டுச்சதி, தடயங்கள் அழிப்பு உள்பட 13 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கைதான 9 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள் மீதான வழக்கு விசாரணை கோவை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இவ்வழக்கில், 50-க்கும் மேற்பட்ட அரசுத்தரப்பு சாட்சிகள் விசாரிக்கப்பட்டதாகவும், சுமார் 200 ஆவணங்கள், 40 மின்னணு தரவுகள் உள்பட பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருள்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்டவர்கள் 8 பேர், விசாரணையின்போது குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர்.

இவ்வழக்கில், ஒவ்வொரு வாய்தாவின்போதும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் சேலம் சிறையில் இருந்தபடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வந்தனர்.

இவ்வழக்கில், அரசு தரப்பு சாட்சியங்கள் நிறைவடைந்ததையடுத்து, கைதான 9 பேரிடம் சட்ட விதிகள் 313-ன் கீழ் கேள்விகள் கேட்பதற்கு கோர்ட்டில் ஆஜர்படுத்தும்படி நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி, திருநாவுக்கரசு உள்பட 9 பேரும் கடந்த 5ம் தேதி சேலத்தில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு, கோவை சிபிஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஆர்.நந்தினிதேவி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, ஒவ்வொருவரிடமும் சுமார் 50 கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கு அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தனர். இந்த நடைமுறை விடியோவில் பதிவு செய்யப்பட்டது.

இதைதொடர்ந்து வழக்கு விசாரணை சூடுபிடித்தது. அரசு விடுமுறை நாள்கள் தவிர்த்து, இதர நாள்கள் அனைத்திலும் குறுக்கு விசாரணை, இரு தரப்பு வழக்குரைஞர்களின் வாதங்கள் தொடர்ச்சியாக நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த மாதம் 28ம் தேதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி ஆர்.நந்தினிதேவி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள் சரிபார்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை என அனைத்தும் நிறைவுபெற்றுவிட்டதால், இவ்வழக்கில் மே 13 அன்று தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவித்தார்.

மேலும், குற்றம்சாட்டப்பட்ட 9 பேரையும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுகளாக நடந்து வந்த இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கராச்சியில் நேரு, அயூப் கையெழுத்திட்ட சிந்து நதி உடன்பாடு! நேருவை வரவேற்ற லட்சம் பேர்!

பாகிஸ்தானுக்குத் தற்போது இக்கட்டானதொரு சூழ்நிலையை ஏற்படுத்தும் விதத்தில் இந்திய அரசு நிறுத்திவைத்துள்ள வரலாற்றுப் புகழ்பெற்ற சிந்து நதி நீர் உடன்பாட்டில் கையெழுத்திட்டவர்கள் இந்தியாவின் முதல் பிரதமர் ... மேலும் பார்க்க