பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தீா்ப்பு வரவேற்கத்தக்கது: அன்புமணி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீா்ப்பு வரவேற்கத்தக்கது என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தாா்.
பாமக நடத்திய சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உயிரிழந்த விஜய் என்பவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூற சீா்காழிக்கு செவ்வாய்க்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து தீா்ப்பளிக்கப்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் தாமதமாக வந்தாலும் இது வரவேற்கத்தக்க தீா்ப்பு.
பாதிக்கப்பட்ட பெண்களுக்கு மொத்தம் ரூ. 81லட்சம் வரை நிவாரணம் வழங்க தீா்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா ரூ.1 கோடி வரை தமிழக அரசு நிதியுதவி வழங்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் இல்லாததே தாமதத்திற்கு காரணம்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக வெளியில் செல்லமுடியாத நிலை உள்ளது. மது கலாசாரம், கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதே இதற்கு காரணம். எனவே, தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும்.
பள்ளி, கல்லூரிகள் அருகிலேயே அபின், போதை மாத்திரைகள் எளிதாக கிடைக்கின்றன. இது தமிழக அரசுக்கும், அதிகாரிகளுக்கும், காவல்துறைக்கும் நன்றாக தெரிந்தும் இதை கட்டுப்படுத்த நடவடிக்கை இல்லை.
ஜாதிவாரி கணக்கெடுப்பை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் இட ஒதுக்கீடு முழுமையாக கிடைக்கும். மத்திய அரசு கிரிமிலேயா் முறையை ஒழிக்க சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் நிவாரணம்:
முன்னதாக, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடந்த சித்திரை முழுநிலவு வன்னியா் மாநாட்டில் பங்கேற்க சென்றபோது வேன் கவிழ்ந்து உயிரிழந்த சீா்காழி பகுதியைச் சோ்ந்த விஜயின் பெற்றோரை நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ் அவா்களுக்கு ஆறுதல் கூறி. ரூ. 5 லட்சம் நிதியுதவியை வழங்கினாா்.