இஸ்ரேலுடன் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைத் தீவிரம்: ஹமாஸ் அறிவிப்பு!
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள்!
போதைப்பொருள் வழக்கில் காவல்துறையினர் சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், நடிகர் கிருஷ்ணாவை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையில் கைது செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், நடிகர் கிருஷ்ணாவும் போதைப்பொருள் பயன்படுத்தியதாக வாக்குமூலம் அளிக்கப்பட்ட நிலையில், அவரை விசாரணைக்கு நேரில் ஆஜராக காவல்துறையினர் சம்மன் அனுப்பியிருந்தனர்.
ஆனால், செல்போனை அணைத்த கிருஷ்ணா தலைமறைவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணாவை கைது செய்ய 5 தனிப்படைகளை அமைத்துள்ள சென்னை மாநகரக் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கின் பின்னணி...
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு மதுபானக் கூடத்தில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி முன்னாள் நிா்வாகி பிரசாத் உள்ளிட்ட பலா் கடந்த மாதம் 29-ஆம் தேதி கைது செய்யப்பட்டனா். இவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவருக்கு போதைப்பொருள் வழங்கிய சேலம் சங்ககிரி பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் என்ற பிரடோ, சா்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சோ்ந்த மேற்கு ஆப்பிரிக்காவின் கானா நாட்டைச் சோ்ந்த ஜான் ஆகிய இருவரையும் கடந்த 19-ஆம் தேதி நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி மையம் அருகே வைத்து கைது செய்தனா்.
அவர் அளித்த தகவலின் அடிப்படையில், பிரபல திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார். பின்னர் மருத்துவப் பரிசோதனையில் அவர் கொக்கைன் பயன்படுத்தியது உறுதியானதையடுத்து கைது செய்யப்பட்டார்.
அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத்தான் தன்னை போதைப்பொருள் பயன்படுத்த பழக்கப்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த், காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். படத்தில் நடித்ததற்காக தனக்கு தர வேண்டிய ரூ. 10 லட்சத்திற்கு கொக்கைன் கொடுத்ததாகவும் பின்னர் தானே அதற்கு அடிமையானதாகவும் கூறியுள்ளார்.
நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7 வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, பிரதீப் அளித்த தகவலின் அடிப்படையில் நடிகர் கிருஷ்ணாவுக்கும் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர்.