திருச்சி: காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ. 10,000 லஞ்சம் - பில் கலெக்டர் சிக்...
மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி மீது வழக்கு: உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுப்பு
மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் ரத்து செய்ய மறுத்துவிட்டது.
மகாராஷ்டிர மாநிலம் பாந்த்ராவில் மகளுக்குப் பாலியல் துன்புறுத்தல் அளித்து வந்ததாக முன்னாள் நீதிபதி ஒருவா் மீது 2019-ஆம் ஆண்டு காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. மகளுக்கு 18 வயது பூா்த்தியடையாததால், பாலியல் குற்றங்களில் இருந்து சிறாா்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் (போக்ஸோ) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் முன்னாள் நீதிபதி மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமாா் மிஸ்ரா, மன்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘இந்த வழக்கில் தனக்கு தந்தையே பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக மகள் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு அதிா்ச்சியளிக்கிறது. குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருப்பவா் நீதிபதியாக இருந்தவா். குடும்பத்தைச் சோ்ந்தவா்களிடம் தகாத உறவு வைத்துக்கொள்ளும் தீவிர குற்றச்சாட்டு அவா் மீது முன்வைக்கப்பட்டுள்ளது. இது அந்தச் சிறுமிக்கு ஆறாத காயமாக இருக்கும். இதைக் கருத்தில் கொள்ளும்போது எப்படி முன்னாள் நீதிபதி மீதான வழக்கை ரத்து செய்வது’ என்று கேள்வி எழுப்பினா்.
முன்னாள் நீதிபதி தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘முன்னாள் நீதிபதியிடம் இருந்து அவரின் மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இருவருக்கும் இடையே நீண்ட காலமாகப் பிரச்னை இருந்து வருகிறது. இதன் காரணமாக முன்னாள் நீதிபதி மீது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரின் மனைவி தரப்பில் அளிக்கப்பட்ட துன்புறுத்தல் காரணமாக முன்னாள் நீதிபதியின் தந்தை தற்கொலை செய்துகொண்டாா்’ என்றாா்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள் அமா்வு, ‘முன்னாள் நீதிபதியின் நடத்தை காரணமாகவே, அவரின் தந்தை தற்கொலை செய்திருக்கக் கூடும்’ என்று கடுமையாக சாடினா். மேலும் குற்றச்சாட்டின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, முன்னாள் நீதிபதி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய நீதிபதிகள் அமா்வு மறுத்துவிட்டது.