மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை ரத்து செய்ய விவசாயிகள் கோரிக்கை
மக்காச்சோளம் மீதான 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனத் தலைவா் வழக்குரைஞா் ஈசன் முருகசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத் துறை மூலமாக தமிழ்நாடு முழுவதும் நடத்தி வரும் வேளாண் விற்பனைக் குழுக்கள் (அஞ்ழ்ண்ஸ்ரீன்ப்ற்ன்ழ்ஹப் ஙஹழ்ந்ங்ற்ண்ய்ஞ் இா்ம்ம்ண்ற்ற்ங்ங்) மூலமாக 40-க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தி பொருள்களுக்கு 1 சதவீத செஸ் வரியை தமிழக அரசு வசூலித்து வருகிறது.
ஏற்கனவே திருப்பூா், ஈரோடு, கோவை, நாகை மாவட்டங்களில் மக்காச்சோளத்துக்கு 1 சதவீத செஸ் வரி வசூலிக்கும் நடைமுறை இருந்து வருகிறது.
இதனை நீக்க வேண்டும் என அந்தந்த மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், நாமக்கல், சேலம், விழுப்புரம், அரியலூா், திருவள்ளூா், விருதுநகா், கடலூா், திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, பெரம்பலூா், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூா், தேனி, திருச்சி, திருவண்ணாமலை, வேலூா், செங்கல்பட்டு ஆகிய 18 மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் மக்காச்சோளத்துக்கும் 1 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
இந்த செஸ் வரி என்பது விற்பனைக் குழுக்கள் அமைந்துள்ள வளாகத்தில் விற்பனை செய்யப்படும் பொருள்களுக்கு மட்டும் வசூல் செய்யலாம் என்பதே சரியானதாகும். ஆனால், நேரடியாக விவசாய நிலங்களில் விற்கும் பொருள்களுக்கு செஸ் வரி விதிப்பது என்பது ஏற்புடையதல்ல.
அது விவசாயிகளுக்கு எதிரானதாகும். சராசரியாக ஒன்றியத்துக்கு ஒரு வேளாண் விற்பனைக் குழு வளாகம் தமிழ்நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ளது.
15 கி.மீ. சுற்றளவுக்கு அதன் விற்பனை பரப்பளவு உள்ளது. ஒரு கிராமத்தில் ஒரு விவசாயியிடம் மக்காச்சோளத்தை கொள்முதல் செய்யும் வியாபாரி 10 கி.மீ.மேல் சரக்கு வாகனத்தை ஓட்டிச் சென்று, வேளாண் விற்பனைக்குழு வளாகத்தில் நிறுத்தி வே பிரிட்ஜ் மூலமாக எடை போட்டு, வரியை செலுத்திவிட்டு எடுத்துச் செல்ல வேண்டும்.
வியாபாரிகள் தற்போது செஸ் வரி செலுத்தும் தொகை, கமிட்டி வரை எடுத்துச் செல்லும் வாடகை ஆகியவற்றை விவசாயிகளிடம் கழித்து பணத்தை கொடுப்பதால் விவசாயிகள் வருமானம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் விற்பனைக் குழுக்கள் மாலை 5 மணிக்குமேல் செயல்படுவதில்லை, சனிக்கிழமை மதியத்துக்குமேல் செயல்படுவதில்லை. இதனால், வியாபாரிகள் பொருளை கொள்முதல் செய்த பின்பு காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஒரு குவிண்டால் மக்காச்சோளம் ரூ. 3,500 விற்பனை செய்தால் மட்டுமே கட்டுபடியாகும் என்ற சூழ்நிலையில் ரூ.2,800-க்கு விற்று வந்த மக்காச்சோளம் இந்தப் பிரச்சனையால் தற்போது ரூ. 2,300-க்கு விற்பனையாகிறது. இதனால், ஒரு குவிண்டாலுக்கு ரூ.500 நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரச்னையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை விதித்திருக்கக்கூடிய 1 % செஸ் வரியை வேளாண் விற்பனைக் குழு வளாகங்களில் மட்டுமே வசூலிக்க வேண்டும் என திருத்தம் செய்த வேண்டும். மேலும், வேளாண் விற்பனை வணிகத் துறையில் பட்டியலிடப்பட்டுள்ள 40 பொருள்களுக்கும் விவசாய நிலங்களில் விவசாயிகள்- வியாபாரிகள் இடையே நேரடியாக நடைபெறும் விற்பனைக்கு முழுமையாக விலக்களித்து உத்தரவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.