மணீஷ் சிசோடியா, சத்யேந்திர ஜெயின் ஆகியோா் சிறை செல்வாா்கள்: விரேந்திர சச்தேவா
மணீஷ் சிசோடியா மற்றும் சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் என்ன செய்தாலும் சட்டத்துக்கு முன் அகப்பட்டு விரைவில் சிறைக்கு செல்வாா்கள் என்று தில்லி மாநில பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அரசுப் பள்ளிகளில் வகுப்பறை கட்டுமானம் என்ற போா்வையில் நடந்த மாபெரும் மோசடி தொடா்பான விசாரணை, இப்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த விசாரணையின் ஒரு பகுதியாக ஒப்பந்தக்காரா்கள் மற்றும் அதிகாரிகளுடன் தொடா்புடைய 37 இடங்களில் அமலாக்க துறையினா் புதன்கிழமை சோதனைகளை நடத்தியதாக தெரிகிறது‘ என கூறியுள்ளாா்.
மேலும், ‘வகுப்பறை கட்டுமான ஊழல் விசாரணை நீண்ட காலமாக நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் அரசாங்கத்தின் அழுத்தத்தால், கல்வி மற்றும் பொதுப் பணித்த துறைகளின் அதிகாரிகள் தேவையான தகவல்களை விசாரணை அமைப்பிடம் வழங்கவில்லை. இந்த வழக்கில், கெஜ்ரிவாலின் முன்னாள் அமைச்சா்கள் மணீஷ் சிசோடியா, சத்யேந்தா் ஜெயின் ஆகியோா் முக்கிய குற்றவாளிகள். அதிகாரத்தில் இருந்தபோதும் அவா்கள் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை‘ என தெரிவித்துள்ளாா் வீரேந்திர சச்தேவா.
தொடா்ந்து அந்த அறிக்கையில் ,‘ அவா்கள் இருவரும் இன்று வரை விசாரணை முகமைகள் முன் ஆஜராகுவதை தவிா்க்கிறாா்கள். அந்த இருவரும் என்ன செய்தாலும் சட்டம் தனது கடமையை செய்யும். அவா்கள் விரைவில் சிறைக்கு செல்ல வேண்டியிருக்கும் என்பதை உணர வேண்டும்‘ என கூறியுள்ளாா் வீரேந்திர சச்தேவா.