தேர்தல் ஆணையருக்கு ஆளுநர் பதவியா? விமர்சனங்களுக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
மண்ணச்சநல்லூர்: ரூ.50 கோடி மதிப்பிலான 1000 ஆண்டு பழைமையான ஐம்பொன் சாமி சிலைகள்!
திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே உள்ள வெங்கங்குடி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். இவர், வெளிநாட்டில் கப்பலில் தலைமை பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் உள்ளவர்கள் தங்களது வீட்டிற்கு அருகே புதிதாக தண்ணீர் தொட்டி அமைக்க முடிவு செய்து அதற்காக பணியாட்களை வரவழைத்து பணியை தொடங்கியுள்ளனர். சுமார் 8 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டிய நிலையில், உள்ளே ஏதோ சிலைகள் தென்பட்டு உள்ளது. இதனால், ஆச்சர்யமானவர்கள், மேலும் மண்ணை அகற்ற அடுத்தடுத்து 3 சிலைகள் தென்பட்டதால் உடனே இது குறித்து மணச்சநல்லூர் காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, மண்ணச்சல்லூர் காவல் நிலைய போலீஸார் மற்றும் வட்டாட்சியர் அங்கு விரைந்தனர். அங்கு சிலைகளை ஆய்வு செய்த போது அவை ஐம்பொன்னாலான பெருமாள், ஸ்ரீதேவி, மூ(மூத்த)தேவி சிலை என்பது தெரிய வந்தது. அதனுடன், மீட்கப்பட்ட பொருட்கள் சாமிக்கு பூஜைகள் செய்ய பயன்படுத்தப்படும் செப்பு பொருட்கள் என்பதும் தெரியவந்தது.
மேலும், சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான இந்த 3 ஐம்பொன் சிலைகளின் மதிப்பு சுமார் ரூ. 50 கோடி இருக்கலாம் என்பது வட்டாட்சியர் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இந்த ஐம்பொன் சிலைகளை தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பதற்காக மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் முன்னிலையில் வருவாய்த்துறையினர் சிலைகளை கைப்பற்றி எடுத்துச் சென்றனர். இதற்கிடையில், பூமிக்கடியில் பழமையான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டதை அறிந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு வந்து சிலையை தரிசனம் செய்து சென்றனர்.