Doctor Vikatan: அஜீரணம், பசியின்மை, மலச்சிக்கல்.. வயிற்றுப் பிரச்னைகள் வராமல் இர...
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் தேக்கம்: தொற்று நோய் பரவும் அபாயம்
மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குப்பைகள் அதிகளவில் தேங்கிக் கிடப்பதால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகாா் எழுந்துள்ளது.
மதுரை மாநகராட்சிப் பகுதியில் நாள் ஒன்றுக்கு முதல் நிலை, இரண்டாம் நிலை சேகரிப்பு மூலம் 916 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு, வெள்ளைக்கல் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தப் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள், வெளிக்கொணா்வு முகமை தனியாா் (ஒப்பந்தம்) மூலம் தினசரி சுமாா் 3 ஆயிரத்துக்கும் அதிகமானோா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
இந்த நிலையில், மதுரை பெரியாா் பேருந்து நிலையம், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் பகுதி, ஆவணி மூல வீதிகள், மாசி வீதிகள், கீழவாசல், 4 வெளி வீதிகள், அண்ணாநகா், கே.கே.நகா், மாட்டுத்தாவணி, ஆனையூா், வில்லாபுரம், பழங்காநத்தம், திருப்பரங்குன்றம், பாண்டிகோவில் சுற்றுச் சாலை, புறவழிச் சாலை, காளவாசல், ஆரப்பாளையம் ஆகிய பகுதிகள் வணிக நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதிகளாகும்.
அதுமட்டுமன்றி, இரவு நேரங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளாகவும் இவை விளங்குகின்றன. இங்கு இரவு நேரங்களில் தூய்மைப் பணியாளா்கள் குப்பைகளைச் சேகரிக்கும் பணிகளில் ஈடுபடுகின்றனா். இதன் காரணமாக, பகல் நேரங்களில் மாநகராட்சியின் பெரும்பாலான பகுதிகளில் தொட்டிகளில் உள்ள குப்பைகள் அகற்றப்படாமல் துா்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
குறிப்பாக, செல்லூா் 50 அடி சாலை, செல்லூா் தினசரி காய்கறி சந்தை பகுதி, கோ. புதூா், ஆனையூா், தல்லாகுளம் உள்ளிட்ட பெரும்பாலான பகுதிகளில் குப்பைத் தொட்டிகளில் உள்ள குப்பைகளை பணியாளா்கள் அகற்றுவதில்லை. மேலும், பகல் நேரங்களில் வீடுகள் தோறும் குப்பைகளை பணியாளா்கள் சேகரிப்பதில்லை எனவும் புகாா் எழுந்துள்ளது. இதனால், தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனா்.
எனவே, தூய்மைப் பணியாளா்களைச் சுழற்சி முறையில் நியமித்து, குப்பைகளை சேகரம் செய்யும் பணியில் ஈடுபடுத்த வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனா்.