மனிதனைக் கடித்து இறந்த பாம்பு; வேப்பங்குச்சியால் பல் துலக்கியதுதான் காரணமா? - நிபுணர்கள் சொல்வதென்ன?
பாம்பு கடித்து மனிதர்கள் இறந்த செய்தியை நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சில தினங்களாக மனிதனைக் கடித்தப் பாம்பு இறந்த செய்தி ஒன்று வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் பாலகாட் மாவட்டத்தில் உள்ள சச்சின் நாக்பூரே (25) என்ற இளைஞர், தற்செயலாக விஷப்பாம்பு ஒன்றை மிதித்துள்ளார். அதனால், அந்தப் பாம்பு அவரை கடித்துள்ளது. சிறிது நேரத்தில் சச்சினைக் கடித்த அந்தப் பாம்பு அங்கேயே உயிரிழந்துள்ளது. பாம்பு கடிப்பட்ட சச்சின் நாக்பூரே, 'கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாகவே நான் வேப்பங்குச்சி, மா குச்சி போன்றவற்றைக் கொண்டுதான் பல் துலக்கி வருகிறேன். அதனால்தான் அந்தப் பாம்பு கடித்தவுடன் எனக்கு அதன் விஷம் ஒன்றும் செய்யவில்லை. ஆனால், அந்தப் பாம்பின் விஷமே அதைக் கொன்றுவிட்டது' எனப் பேசியிருந்தார். அவர் பேசிய அந்த செய்தி சில நாள்களாக பரவலாகப் பேசிப்பட்டு வருகிறது.
உண்மையில் மனிதர்களைக் கடித்தால் பாம்பு இறந்துபோவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா; பாம்பின் விஷமே பாம்பினைக் கொல்லுமா; அவர் சொன்னதுபோல வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்றவற்றால் பல் துவக்கினால் விஷக்கடியில் இருந்து உயிர்ப்பிழைக்க முடியுமா..? அலசுகிறது இந்தக் கட்டுரை.

உண்மையில் மனிதனின் நோய் எதிர்ப்புத் திறன் ஒரு விஷப்பாம்பைக் கொல்லுமா என்பதை விவரிக்கிறார் சென்னை பாம்பு பூங்கா அறக்கட்டளையின் ஆராய்ச்சி இயக்குனர் வி.கலையரசன். அவர் பேசுகையில், "மனிதனைக் கடித்ததால் பாம்பு இறந்து விட்டது என்பது ஒரு கட்டுக் கதையாகத்தான் இருக்கும். இதுவரை இப்படியொரு நிகழ்வு நடக்கும் என எந்தவொரு அறிவியல் பூர்வமான ஆய்வும் சொல்லவில்லை. மனிதர்களுக்கு தானாகவே பாம்புக் கடிக்கான நோய் எதிர்ப்புத்திறன் உண்டாவதற்கு வாய்ப்புகள் இல்லை. உலகிலேயே குதிரைகளுக்கு மட்டும்தான், பாம்பக்கடிக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறன் கொண்ட எதிர்விஷ புரதங்களை உருவாக்கக்கூடிய தன்மை உண்டு. அதனால்தான் பாம்புக் கடிக்கு எதிரான 'Anti venom' (எதிர்விஷம்) மருந்து தயாரிப்பில் குதிரைகள் பயன்படுத்தப்படுகிறது .
அந்த மனிதரை கடித்தவுடன் பாம்பு இறந்து போனதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அந்தப் பாம்பு உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கலாம். பாம்புகளுக்கு அதனுடைய வாய்ப்பகுதியிலோ, விஷப்பற்களிலோ தொற்று பாதிப்பு ஏற்படும். அவ்வாறு தொற்று ஏற்பட்டிருக்கும்போது பாம்புகள் உணவு உட்கொள்ளாமல் சிறிது காலத்திலேயே இறந்துவிடும். அந்த இறந்த பாம்பிற்கும் அந்தப் பிரச்னை இருந்திருக்கலாம். எந்த ஒரு மனிதனும் பாம்பு கடிக்கிறது என்றால் அமைதியாக நின்றுகொண்டிருக்க மாட்டார்கள். அதை அடிப்பது, மிதிப்பது போன்று தொந்தரவுகளை ஏற்படுத்தவே செய்வார்கள். பாம்புகளின் தலையை அழுத்தமாக மிதித்தால்கூட இறந்துவிடும். அந்த நபர் பதற்றத்தில் அதன் தலையை மிதித்து இருப்பார். அதனால்கூட அந்தப் பாம்பு இறந்திருக்கலாம். அதை ஆய்வு செய்தால் மட்டுமே, அது இறந்ததற்கான உண்மையானக் காரணத்தைக் கண்டறிய முடியும்'' என்கிறார் கலையரசன்.

வேப்பங்குச்சி, மாமரக்குச்சி போன்ற இயற்கை குச்சிகளைப் பயன்படுத்தி பல் துலக்குவதால் மனித உடலில் விஷமுறிவு தன்மையை ஏற்படுமா என்பதை விளக்குகிறார் திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் விக்ரம்குமார்.
''அந்தப் பாம்பு இறந்துபோனதற்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கலாம். மா,வேம்பு போன்ற மரத்தின் குச்சிகளைக் கொண்டு பல் துலக்கியதால்தான் இந்த பாம்பு இறந்து இருக்கும் என கூறியிருப்பது புரிதல் இல்லாமல் கூறியிருக்கும் ஒரு தவறான தகவல்.

ஆலமரம், வேப்பமரம், புங்கை மரம், நாயுறுவி, மருதம், நாவல்மரம் போன்றவற்றின் குச்சிகளையோ, வேர்களையோ கொண்டு பல் துலக்கும்போது பற்கள், ஈறுகள் வலுப்பெறும். வாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் முற்றிலும் அழிந்துவிடும். நாக்கு சுத்தமடையும். தவிர, இதுபோன்ற இயற்கைப்பொருள்களை கொண்டு பல் துலக்குமபோது அவர்களுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்தான். அது சில கிருமிகள் உடலுக்குள் செல்வதையோ, பல்கி பெருகுவதையோ தடுக்கும்தான். ஆனால், கொடிய பாம்புகளின் விஷத்தன்மையை முறிக்கும் அளவுக்கு பலன் தராது.
'இந்த இயற்கை பொருள்களைக் கொண்டு பல் துலக்குவதால் விஷ முறிவு தன்மை உடலில் உருவாகும்' என இதுவரை சித்த மருத்துவத்தில் குறிப்பிடவில்லை. ஆனால், விஷக்கடி சிகிச்சைக்கான புத்தகத்தில் 'நிம்பை எண்ணெய் உள்ளிருந்தால் விஷக்கடி ஒடும் அன்றோ' என்று குறிப்பிட்டிருப்பார்கள். அதாவது, வேப்ப எண்ணெய் எடுத்துக்கொள்ளும்போது விஷக்கடியோட குறி குணங்கள் இல்லாமல் போகும் என்பது அதன் அர்த்தம். மேலும் விஷக்கடிகளின் குறி குணங்களுக்கு ஏற்ப அவற்றை குணப்படுத்த பல்வேறு சிகிச்சை முறைகளும் சித்த மருத்துவத்தில் உள்ளது.
ஆனால், அந்த வைரல் செய்தியைப் படித்துவிட்டு, யாராவது 'நானும் வேப்பமரம், ஆலமரம் போன்ற இயற்கைக்குச்சிகளில்தான் பல் துலக்குகிறேன். எனக்கும் விஷமுறிவுத்தன்மை ஏற்பட்டிருக்கும்' என நம்பிக்கொண்டு பாம்பு கடித்தாலும் டாக்டரைப் பார்த்து சிகிச்சை எடுக்காமல் இருக்கக்கூடாது. விஷப்பாம்போ, விஷமற்ற பாம்போ எதுவாயினும் பாம்பு கடித்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும்'' என்கிறார் சித்த மருத்துவர் விக்ரம் குமார்.