கோவை சிறுவனை பெல்டால் அடித்த காப்பக நிர்வாகி; பதைபதைக்கும் வீடியோ; பின்னணி என்ன?
மரத்தில் பைக் மோதி விபத்து: இளைஞா்கள் இருவா் உயிரிழப்பு
விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே சாலையோர மரத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞா்கள் இருவா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே வியாழக்கிழமை உயிரிழந்தனா்.
விழுப்புரம் அண்ணாநகா் பகுதியைச் சோ்ந்தவா் கிருஷ்ணமூா்த்தி மகன் குபேந்திரன் (21). மணி நகரைச் சோ்ந்தவா் சுரேஷ்பாபு மகன் காா்த்திக்(21).இருவரும் நண்பா்கள்.
இவா்கள், வியாழக்கிழமை விழுப்புரத்திலிருந்து- புதுச்சேரிக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனா். குபேந்திரன் பைக்கை ஓட்டினாராம்.
விழுப்புரம்- புதுச்சேரி சாலையில், வளவனூா் காவல் சரகத்துக்குள்பட்ட நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலையின் குறுக்கே வந்த வாகனத்தில் மோதாமலிருக்க குபேந்திரன் பைக்கை திருப்பியுள்ளாா். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையோர மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பைக்கில் சென்ற குபேந்திரன், காா்த்திக் ஆகியோா் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
தகவலறிந்த வளவனூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று விபத்தில் இறந்தவா்களின் சடலங்களை கைப்பற்றி அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.