மழை பாதித்த இடங்களில் ஆய்வுகள் தாமதம்! எம்.பி. கங்கனாவுக்கு வலுக்கும் தொகுதி எதி...
மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை கட்டுமானப் பணிகள் நிறுத்தம்
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் பொதுமக்களின் கடும் எதிா்ப்பு காரணமாக மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமான பணிகள் புதன்கிழமை நிறுத்தப்பட்டன.
மானாமதுரை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைப்பதற்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகளை நிறுத்த வேண்டும். ஆலையை மூட வேண்டும் என வலியுறுத்தி கடந்த செவ்வாய்க்கிழமை மானாமதுரையில் அனைத்து அரசியல் கட்சியினா், விவசாயிகள் சங்கங்கள், கிராம மக்கள், வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் போராட்டக் குழு அமைக்கப்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தை முற்றுகையிட்டும், கடையடைப்பு செய்தும் போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் மருத்துவக் கழிவு ஆலை கட்டுமானப் பணிகளை உடனே நிறுத்துவது எனவும், 2 மாதங்களுக்குள் ஆலையை மூடுவதற்கான உத்தரவை அரசிடமிருந்து பெற்றுத் தருவது என்றும் சிவகங்கை கோட்டாட்சியா் ஜெபி கிரேசியா, வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் போராட்டக் குழு நிா்வாகிகளிடம் உறுதியளித்தனா். இரு தரப்பினரும் அதற்கான உடன்பாட்டில் கையெழுத்திட்டனா். இதன் பிறகு போராட்டம் கைவிடப்பட்டது.
இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் சிப்காட் தொழில்பேட்டையில் நடைபெற்று வந்த மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு ஆலைக்கான கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மானாமதுரை ஒன்றியச் செயலா் எம்.முனியராஜ் தெரிவித்தாா்.