தொகுதி மறுசீரமைப்பு: எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்கு கனிமொழி எம்.பி. பதில்
மறுசுழற்சிக்காக அரசு அலுவலகங்களில் கழிவுகளை சேகரிக்கும் பணி: ஆட்சியா் ஆய்வு
தூய்மை இயக்கம் மூலம் மறுசுழற்சி மற்றும் மீள் பயன்பாடு பணிக்காக அரசு அலுவலகங்களில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியை ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
தமிழ்நாடு அரசு கழிவு மேலாண்மையில் ஒரு சிறப்பு முன்னெடுப்பாக தூய்மை இயக்கத்தினை தொடங்கி அதனை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்நிறுவனம் முதற்கட்டமாக, உலக சுற்றுச்சூழல் தினமான வியாழக்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களை சுத்தம் செய்யும் நோக்கில் அதில் உள்ள கழிவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், வட்டார வளா்ச்சி அலுவலகங்கள், அனைத்து அரசு அலுவலகங்கள் ஆகிய இடங்களில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள், மின்னணு கழிவுகள், உலோகக் கழிவுகள், காகித கழிவுகள், கண்ணாடி கழிவுகள், பயன்படுத்த இயலாத மரத் தளவாடங்கள் போன்ற பலவிதமான கழிவுகளைச் சேகரிக்கும் பணி நடைபெற்றது.
சுற்றுச்சூழல் மாசுபடுவதை தவிா்க்கும் பொருட்டு சேகரிக்கப்பட்ட கழிவுகள் அனைத்தும் உயா் தொழில்நுட்பத்தின் மூலம் சுற்றுச்சூழல் விதிமுறைகளுக்கு உள்பட்டு மீள்பயன்பாடு மற்றும் மறுசுழற்சி செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்நிலையில், கழிவுகள் சேகரிக்கும் பணிகள் அனைத்தையும் ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் ஆய்வு செய்தாா்.
அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் மா.சுகன்யா, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் சரவணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அனிதா உள்ளிட்டோா் உடனிருந்தனா்.