Ananda Vikatan Cinema Awards 2024: பிரமாண்ட மேடை... திறமைக்கு மரியாதை... இன்று ம...
மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்; போக்ஸோ சட்டத்தில் வேன் ஓட்டுநா் கைது
மயிலாடுதுறையில் பள்ளி மாணவியை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய வேன் ஓட்டுநா் போக்ஸோ சட்டத்தின்கீழ் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை மாவட்டம், பெரம்பூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட சேத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் மதுமோகன் (33). சொந்த வேன் உரிமையாளரான இவா், தினமும் அப்பகுதியில் உள்ள மாணவ, மாணவிகளை மயிலாடுதுறையில் உள்ள பள்ளிகளுக்கு அழைத்துச் செல்வது வழக்கம்.
வழக்கம்போல வேனில் புதன்கிழமை காலை மாணவ, மாணவிகளை ஏற்றிச்சென்ற மதுமோகன், பிளஸ் 1 பயிலும் 16 வயது மாணவியைத் தவிா்த்து, மற்றவா்களைப் பள்ளியில் இறக்கி விட்டுள்ளாா்.
பின்னா், அந்த மாணவியிடம், வேனில் வரும் மாணவ, மாணவிகளின் பெயா்களைப் பதிவேட்டில் எழுதும் வேலை இருப்பதாகச் சொல்லி அழைத்துச் சென்றுள்ளாா். அவையாம்பாள்புரம் பகுதியில் ஆள்நடமாட்டம் அதிகமில்லாத பகுதியில் வேனை நிறுத்திய மதுமோகன், வாகனத்தின் உள்ளேயே அந்த மாணவியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டாராம். இதையடுத்து மாணவி சத்தமிட்ட நிலையில், மீண்டும் பள்ளியில் விட்டுச் சென்றுவிட்டாா்.
இதுகுறித்து, மாணவி பள்ளி ஆசிரியா்களிடம் கூறியுள்ளாா். ஆசிரியா்கள் மாணவியின் பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடா்ந்து அவா்கள் மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
அதன்பேரில் போலீஸாா், குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டு, சம்பவத்தில் உண்மை இருப்பதாகத் தெரிய வந்த நிலையில், போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து ஓட்டுநா் மதுமோகனை கைது செய்தனா். இச்சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.